Thursday, November 26, 2020

ரன்னிங் டைரி - 147

  26-11-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது தம்பியின் கல்யாணம் தான்.இன்று அவனுக்கு ஊரில் கல்யாணம். கடந்த பதினைந்து வருடங்களில் ஊரில் நடந்த எந்த கல்யாணத்திற்கும் செல்லவில்லை.இந்த கல்யாணத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன் ஆனால் இந்த கொரோனாவால் முடியவில்லை. என் வயதுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணங்களுக்கு நான் சென்றதில்லை. கடந்த இரண்டு வருடமாக எனக்கு அடுத்த தலைமுறையினரின் திருமணங்களுக்கும் செல்ல முடியவில்லை. இவன் எங்களோடு வளர்ந்தவன். எங்கள் வீட்டிற்கும் அவர்களின் வீட்டிற்கும் அப்போது வேலி இல்லை. இரவில் வெளியே பாயைப் போட்டு நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டே பல நாட்கள் தூங்கி இருக்கிறோம். ஏனோ அவற்றை நினைத்து கண்ணீர் வந்தது. துடைத்துக் கொண்டே ஓடினேன்.  வாழ்வில் அனைத்தும் பெற்று நிறைவாக வாழ வேண்டுமென்று மனதினுள் வாழ்த்தினேன். அவனின் அம்மா என் அத்தாச்சி எனக்கு மிகவும் பிடித்தவர். என் பள்ளி நாட்களில் நாங்கள் அவர்கள் வீட்டில்தான் பெரும்போலும் நேரம் கழிப்போம். அத்தாச்சி எதிர்கொண்ட துன்பங்கள் மற்றும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதம் .... அத்தாச்சி is great ... என்று நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: