Tuesday, February 15, 2022

மன்னார் பொழுதுகள் - வேல்முருகன் இளங்கோ



வேல்முருகன் இளங்கோவின் எழுதிய எதையுமே இதற்குமுன் நான் வாசித்ததில்லை. எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் இந்த புத்தகத்தைப் பற்றி முகநூலில் மிகவும் பாராட்டி எழுதி இருந்தார். அப்படித்தான் இந்த புத்தகத்தின் அறிமுகம் கிடைத்தது. சென்ற வாரம் நூலகம் சென்றபோது இந்த புத்தகத்தைப் பார்த்தவுடன் எடுத்தேன். மிகவும் எதிர்பார்ப்போடு வாசிக்க ஆரம்பித்தேன். மூன்று நாட்களில் வாசித்து முடித்தேன். பல மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்.

கதைக்களம் நெய்தல் நிலம். எம் மக்களின் நிலம். எனக்குத்  தெரிந்து நெய்தல் நிலத்தைக் கதைக்களமாக கொண்ட தமிழ்  நாவல்களின் பட்டியல் மிகவும் சிறியது.வேல்முருகன் இளங்கோ என்ன கதைக்கருவை கையாளப்போகிறார் என்ற ஆவலுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.ஆரம்பம் முதல் இறுதிவரை தொய்வே இல்லாமல் கதை சொல்லிருக்கிறார்.இரண்டு குடும்பங்களின் கதை.திருநெல்வேலி தூத்துக்குடி  மற்றும் மணல்மேல்குடி தான் கதையின் முக்கிய இடங்கள். மீனவர்களின் வரலாறு தெரிந்தால்தான் தற்போது இருக்கும் சிக்கல்களுக்கு முடிவு காண முடியும் . அப்படித்தான் இந்நிலங்களின் சிறப்பு மற்றும் அங்கு வாழப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை வரலாற்று பின்னணியில் சொல்லிருக்கிறார் வேல்முருகன் இளங்கோ. கடல் பற்றிய விவரிப்புகளும் வர்ணனையும் நன்றாக இருக்கிறது.  அந்திமழை இதழுக்கு அளித்த பேட்டியில்  பின்வருமாறு கூறியிருந்தார் :

கடல் பற்றி நாவலில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது, இதற்கு எவ்வாறு சிரத்தை எடுத்துக்கொண்டீர்கள்?

............ ஒரு சிறுவனைப் போல் கடலை அணுகியதால் தான் அது தாய்மனதோடு நாவலுக்குள் ஓடி நிறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

வாசிக்கும் நம்மையும் ஒரு சிறுவனைப்போல் கடலுக்குள் இழுத்துச்செல்கிறார்.கதை வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு மாந்தர்களால் சொல்லப்பட்டாலும் அனைத்தையும் ஒரு மையப்புள்ளியில் இணைத்திருக்கிறார். முதலில் இசக்கி  - தனசேகர் , பின்பு இசக்கி - நஞ்சுண்டான் இறுதியில் நஞ்சுண்டான் -இருதயராஜ் உறவுகளின் வழியே ஒரு பெரும் வரலாற்றைச் உயிருடன் சொல்லியிருக்கிறார். 

கடலின் பார்வையில் கடலோடி என்பவன் அதன் ஒரு துளி நீருக்கு மட்டுமே ஒப்பானவன்.

பரதவர்களின் எதிரி அவர்களே என்று பலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.  இந்த நாவலில் அது அப்படியே வெளிப்பட்டிருக்கிறது. இரு குடும்பங்களின் போட்டி பொறாமை வெறி  எப்படி பல மதம் மற்றும் சாதிகளின் ஒற்றுமையைக் கெடுத்தது என்பதை அக்காலகட்டத்தின் தூத்துக்குடியின்  பொருளியல்  வன்முறை வரலாற்றோடு சொல்லியிருப்பது நன்று.ஜோஸ்லின் விக்டோரியா ,ராணி ,மரியா டிசோசா மற்றும் மங்கம்மாள் - இவர்களின் கதை எளிதில் மறக்க முடியாது.அவர்கள் கதையில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறாரகள்.மதம் சாதி மாறி திருமணம் செய்யும் ஜோஸ்லின்,மதப் போதகர்களால் கொல்லப்படும் மரியா டிசோசா,சொந்த அப்பா மற்றும் அண்ணன்மார்களால் கொல்லப்படும் மங்கம்மாள் இவர்கள்தான் ஆண்களின் வாழ்வையும் தீர்மானிக்கிறார்கள். நஞ்சுண்டான் கதாப்பாத்திரத்தை இன்னொரு நாவலாகவே எழுதலாம். தமிழ் தேசியம் பேசும் அவரின் பாத்திரப்படைப்பு கதையுடன் அழகாக பொருந்துகிறது. இவர் மாதிரியான ஆட்களை பற்றி நான் எங்கள் ஊரில் கேள்விப் பட்டிருக்கிறேன். 

ஜெரோம் என்ற கதாப்பாத்திரம் பின்வருமாறு ஓரிடத்தில் சொல்கிறது :

தட்டு மடி வைப்பதோ அல்லது வலை விரித்து காத்திருப்பதோ மரியாளிடம் வேண்டுதல் வைப்பது மாதிரியானது.நமது தேவைகளை உணர்ந்து அவளே நமக்கான மீன்களை நமது வலையில் கொண்டுவந்து சேர்ப்பாள். ஆனால் இழுவை மாடி இழுப்பது என்பது அவளது அனுமதியோ விருப்போமோயின்றி அவளது வயிற்றிலிருந்து சின்னஞ்ச சிறுப் பிள்ளைகளை பறித்து வருவதற்கு ஒப்பானது. 

என் பெரியப்பா இதையே  சற்று வேறு விதமாக சொல்வார்  "இரட்டை மடியும் இழுவை மடியும் நம்மல அழிச்சிரும் " . அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

சீரான எளிமையான எழுத்து நடை. எந்த சமரசமும் செய்யாமல் சொன்னது கதையின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Monday, December 20, 2021

பிடித்த நாற்பது

இரண்டு வாரங்களுக்கு முன்பு என் மகள் என்னிடம் நீங்கள் வாசித்ததிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த  fiction எது என்று கேட்டாள். நான் ஒரே ஒரு புத்தகத்தை சொல்வது கடினம் என்றேன். அதற்கு அவள் அப்போ உங்களுக்கு நாற்பது வயதாகப் போகிறது அதனால் நாற்பது புத்தங்கள் சொல்லுங்கள் என்றாள். சரியென்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் நாற்பது தமிழில் நாற்பது என்றேன் .

சிறு வயதிலிருந்தே அப்பா மூலம் வாசிப்பினுள் நுழைந்தேன். அப்போது எங்கள் ஊரில்  நூலகம் இருந்ததே எங்களுக்குத் தெரியாது.  சிறுவர்மலர் வாரமலர் எப்போதாவது ஆனந்தவிகடன் அவ்வளவுதான். ஆனால் தினமும்  பேப்பர் வாசிப்போம். அந்த பழக்கம்தான் பின்னாளில் புத்தக வாசிப்பிற்கு இழுத்துச் சென்றது.பாம்பன் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு பள்ளிப் படிப்பிற்கு சென்றபோது கடைகளில் பார்த்த புத்தகங்களால் ஒருவித ஆர்வம் தோன்றியது. அந்த ஆர்வத்தை இன்றுவரை அணையாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். புத்தகங்களை தேடிச் சென்று வாங்கி வாசிப்பது அப்போது ஆரம்பித்தது. அப்பா புத்தகம் வாங்குவதற்கென்றே தனியாக பணம் தருவார். சென்னையிலிருந்து கல்லூரி படிப்பிற்கு கோவை சென்றபோது தான் முதல் முறையாக தமிழ் நாவல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது.

கீழேயுள்ள புத்தகப் பட்டியலில் பெரும்பான்மையான புத்தகங்கள் நான் சிங்கப்பூர் வந்த பிறகு வாசித்தவை. அதிலும் பெரும்பான்மையான புத்தகங்கள் சிங்கப்பூர் நூலங்களில் இன்றும் உள்ளன. "The Divine Comedy - Dante " இந்த புத்தகத்தை வருடந்தோறும் நான் வாசிக்கிறேன்.என் படுக்கை அறையில் எப்போதும் இருக்கும் புத்தகம் இது. என் சிந்தனையை மாற்றிய புத்தங்களில் முக்கியமானது "The Stranger - Albert Camus". மூன்று முறை  வாசித்திருக்கிறேன். பல கேள்விகள் இன்னும் இருகின்றன."Crime and Punishment by Fyodor Dostoevsky" இந்த புத்தகத்தை முதல் முறை  ஒரு பயணத்தின்(சிங்கப்பூர் -சென்னை-விஜயவாடா -சென்னை -பாம்பன் -சென்னை -சிங்கப்பூர் ) போது வாசித்தேன். அபூர்வமான அனுபவம். அதற்குப் பிறகு இந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்திருக்கிறேன் . Invisible Cities - Italo Calvino சில மணித்துளிகளில் வாசித்து முடித்தேன். அபாரமான படைப்பு.Italo Calvino கதை சொல்லும் தாத்தா போல. Gabriel Garcia Marquez -ன் One Hundred Years Of Solitude நாவலை ஒரு வாரத்திற்கு மேலாக வாசித்தேன். இந்த நாவலை மறக்க முடியாது. சென்ற மாதம் காலமான என் பெரியப்பாவிடம் பல முறை இந்த புத்தகத்தைப் பற்றி பேசியிருக்கிறேன். I Am a Cat - Natsume Soseki  இந்த புத்தகத்தை MRTயில்  பயணம் செய்யும் போது மட்டுமே வாசித்தேன்.பலவிதமான அனுபவங்கள் தந்த நாற்பது புத்தகங்கள் .

1)The Divine Comedy - Dante 

2)The Stranger - Albert Camus 

3)One Hundred Years Of Solitude -Gabriel Garcia Marquez

4)Crime and Punishment - Fyodor Dostoevsky

5)Things Fall Apart - Chinua Achebe

6)War and Peace - Leo Tolstoy

7)Maus - Art Spiegelman

8)The Brothers Karamazov - Fyodor Dostoyevsky

9)Anna Karenina - Leo Tolstoy

10)The Decameron - Giovanni Boccaccio

11)Atlas Shrugged by Ayn Rand

12)Gilead - Marilynne Robinson

13)I Am a Cat - Natsume Soseki

14)The Thief - Fuminori Nakamura

15)2666 - Roberto Bolano

16)Hopscotch - Julio Cortazar

17)The Tunnel - Ernesto Sabato

18)The Feast of the Goat - Mario Vargas Llosa

19)The Gift of Rain - Tan Twan Eng

20)Swann's Way -  Marcel Proust

21)Pere Goriot - Honore de Balzac

22)The Unbearable Lightness of Being - Milan Kundera

23)Disgrace - JM Coetzee

24)The Name Of The Rose - Umberto Eco

25)My Name Is Red - Orhan Pamuk

26)The Trial - Franz Kafka

27)Blindness - Jose Saramago

28)Invisible Cities - Italo Calvino

29)Night - Elie Wiesel

30)Solaris- Stanisław Lem

31)The Rings of Saturn - WG Sebald

33)The Little Prince - Antoine de Saint-Exupery

34)Soul Mountain - Gao Xingjian

35)The Book of Disquiet - Fernando Pessoa

36)The Three-Body Problem - Cixin Liu

37)Season of Migration to the Nation - Tayeb Salih

38)Giovanni's Room - James Baldwin

39)The Scarlet Pimpernel - Baroness Orczy

40)Great Expectations - Charles Dickens

தமிழில் நாற்பது:

1)தாண்டவராயன் கதை -பா.வெங்கடேசன் 

2)காவல் கோட்டம்  - சு.வெங்கடேசன் 

3)உப்பு நாய்கள்  - லஷ்மி சரவணக்குமார் 

4)நீலகண்டம்  -சுனீல் கிருஷ்ணன் 

5)சுபிட்ச முருகன்  - சரவணன் சந்திரன் 

6)அஞ்ஞாடி  - பூமணி 

7)தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ் 

8) ஆழி சூழல் - ஜோ .டி  குருஸ் 

9)வேனல் - காலப்பிரியா 

10)பருக்கை  - வீரபாண்டியன் 

11)வலம்  -  விநாயக முருகன் 

12)துறைவன்  - கிறிஸ்டோபர் ஆன்றணி 

13)ஜீவனாம்சம் - சி சு செல்லப்பா 

14) உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன் 

15)கரமுண்டார் வூடு - தஞ்சை பிரகாஷ் 

16) கடல்புரத்தில்  - வண்ண நிலவன் 

17)கூகை  - சோ.தர்மன் 

18)சிலுவைராஜ் சரித்திரம்  - ராஜ் கௌதமன் 

19)அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

20)காதுகள் - எம். வி. வெங்கட்ராம்

21)இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா 

22)ஒற்றன் - அசோகமித்திரன்

23)இடைவெளி - சம்பத் 

24)கன்னி -பிரான்சிஸ் கிருபா 

25)நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்

26)பிறகு - பூமணி 

27)கோவேறு கழுதைகள் - இமையம் 

28)காடோடி - நக்கீரன்

29)வேள்வித் தீ - எம்.வி.வெங்கட்ராம்

30)சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் 

31)புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்

32)ஜே.ஜே: சில குறிப்புகள் -  சுந்தர ராமசாமி

33)காடு - ஜெயமோகன் 

34)விசாரணைக் கமிஷன் -சா.கந்தசாமி

35)சாய்வு நாற்காலி  -தோப்பில் முஹம்மது மீரான் 

36)ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி 

37)விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - சி.மோகன்

38)ஆப்பிளுக்கு முன் - சி. சரவணகார்த்தியேன்

39)கருக்கு - பாமா

40)பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு


Monday, March 29, 2021

ரன்னிங் டைரி - 192

 29-03-2021 08:37

கிழக்கு கடற்கரை பூங்கா 

மொசார்டின் 41வது சிம்பனியை play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் இசையில்தான் இருந்தது. பத்து கிலோமீட்டர் ஓடியதே தெரியவில்லை. இந்த சிம்பனியைப் பற்றி என்னத்த சொல்ல .. just amazing .. முக்கிய சாலையை அடைந்தபோது வயதான இந்திய தம்பதியர் என்னை நோக்கி கைகாட்டினார். நான் earpiece-ஐ காதுகளிலிருந்து எடுத்துவிட்டு அவர்களை நோக்கிச் ஓடினேன். அந்த தாத்தா ஆங்கிலத்தில் "கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு எந்த வழியில் செல்ல வேண்டும் " என்று கேட்டார். நான் வழியைக் காட்டினேன். "நன்றி " என்றார். " கடற்கரை நல்ல இருக்குமா?" என்று கேட்டார். உடனே நான் ஒரு சிறிய உரையை நிகழ்த்தினேன். அவர்கள் பொறுமையாய் கேட்டுவிட்டு."நான் நீங்கள் இந்தியர்  என்று நினைத்தேன். இவ்வளவு விசயங்களை கடற்கரைப் பற்றி சொல்கிறீர்கள்" என்றார். நான் "நான் "இந்தியர் தான் . இந்த கடற்கரைக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வருகிறேன்." என்றேன். "சரி வருகிறோம்" என்று சொல்லிவிட்டு கடற்கரையை நோக்கி நடந்தார்கள். நான் நடந்து வீட்டை அடைத்தேன்.

ரன்னிங் டைரி - 191

 27-03-2021 17:00

கேலாங் பூங்கா 

இரண்டு சுற்றுக்கள் ஓடலாம் என்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். மலேசியா வாசுதேவன்  "ஆசை நூறு வகை.." ஆரம்பித்திருந்தார். நான் இருபது நிமிடத்திற்குள் ஓடி முடிக்க நினைத்திருந்தேன். அதனால் ஆரம்பித்ததே சற்று வேகமாக ஆரம்பித்தேன். முதல் சுற்று பத்து நிமிடத்திற்குள் ஓடி முடித்தேன். இரண்டாவது சுற்று தொடங்கியபோது "டிங் டாங் ..இரண்டும் ஒன்றோடு .." ஆரம்பித்தது. பாடலைப் பாடிக் கொண்டே ஓடினேன். டிராபிக் சிக்னலில் நின்றேன். அதன் பிறகு ஓட  மனம்  வரவில்லை. நடக்க ஆரம்பித்தேன். பழைய புத்தகக் கடையைப் பார்த்ததும் நின்று புத்தகங்களை புரட்டினேன்."Godel ,Escher ,Bach : An Eternal Golden Braid" புத்தகம் கையில் கிடைத்தது. பல வருடங்களுக்கு முன் சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன். அந்த புத்தகத்தை பேருந்தில் வைத்துவிட்டு இறங்கி விட்டேன். அதற்குப் பிறகு இன்றுதான் இந்த புத்தகத்தை தொடுகிறேன். வாசிக்க ஆரம்பித்தேன். கடைக்காரர் இரண்டு டாலர்கள் போதும் என்றார். நான் கொடுத்துவிட்டு புத்தகத்தைத் எடுத்து வந்தேன்.

Saturday, March 20, 2021

ரன்னிங் டைரி - 190

20-03-2021 06:25

கிழக்கு கடற்கரை பூங்கா

வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் எமிலி டிக்கின்ஸன் எழுதிய  "Because I could not stop for death.." கவிதை ஞாபகத்தில் வந்தது. நேற்று இரவு "Poetry for beginners -Margaret Chapman & Kathleen Welton" புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.அதில் இந்த கவிதை இருந்தது. வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்த கவிதையை வாசித்தேன்.அற்புதமான கவிதை -இறப்புடன் ஒரு பயணம். சற்று தூரம் நடந்து விட்டு போனில் மொசார்டின் -Symphony 41 in C Minor" play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது மாநில உரிமைகள் பற்றிய "one nation .." இந்த கட்டுரைதான். இந்த தேர்தல் தமிழ் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்த சிறிது நேரத்திலேயே இருவர் என்னை முந்திச் சென்றனர். நான் அவர்களை பின்தொடர ஆரம்பித்தேன்.பதினெட்டு நிமிடங்களில் அவர்களுடன் நான் நான்கு கிலோமீட்டர்களுக்கு மேல் ஓடிருந்தேன். அதற்குமேல் என்னால் அந்த வேகத்தில் ஓட முடியவில்லை. வேகத்தை மிகவும் குறைத்தேன். கவனம் சிம்பனியில் சென்றபோது மொசார்ட் தனி உலகை படைத்துக் கொண்டிருந்தார். எனக்குப் பிடித்த சிம்பனிகளில் இதுவும் ஒன்று. சில நாட்களுக்குப் பிறகு இன்றுதான் கேட்டேன்."Amadeus" திரைப்படம் ஞாபகத்தில் வந்தது. இது மொசார்டின் இறுதி சிம்பனி.அவருடைய இறுதி மூன்று சிம்பனிகள் அடுத்தடுத்து வெகு குறைந்த நாட்களில் எழுதப்பட்டது. மூன்றும் அற்புதமானவை. மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகா கேட்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் .இந்த சிம்பனிகள் ..  One of the greatest artistic achievement.. என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.