Sunday, February 28, 2021

ரன்னிங் டைரி - 179

 27-02-2021 05:45

கிழக்கு கடற்கரை பூங்கா 

வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் என்னை சுண்டி இழுத்தது எதிரே தங்க நிறத்தில் இருந்த நிலாதான். எண்ணத்தில் வந்தது  நேற்று  வாசித்த ஜி.கனிமொழியின் "இந்த நிலவு...." கவிதைதான். சொல்லிப் பார்த்தேன் முதல் இரண்டு அடிகள்தான் ஞாபகத்தில் வந்தது. 

'இந்த நிலவு ஏனிப்படி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது 

இந்த நிலவு ஏனிப்படி அகண்டிருக்கிறது '

ஐந்து நிமிடம்  நின்று நிலாவைப் பார்த்தவிட்டு ஓட ஆரம்பித்தேன். நிலாவைப் பற்றிய வேறேதும் தமிழ் கவிதைகள் இருக்கிறதா  என்று யோசித்துக் கொண்டே ஓடினேன். எனக்கு எந்த கவிதையும் ஞாபகத்தில் வரவில்லை. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது கவனம் ஓடிக் கொண்டிருந்த மூவரின் மேல் சென்றது. மூவரையும் பல பந்தயங்களில் பார்த்திருக்கிறேன். சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர் .நான் அவர்களைத் தொடர முடிவு செய்து ஓடினேன். கவனம் முழுவதும் அவர்களின் கால்களில் தான் இருந்தது. அவர்களுடனே பன்னிரெண்டு கிலோமீட்டர் ஓடினேன். அதன் பிறகு அவர்களை முந்திச் சென்று ஒரு கிலோமீட்டர் ஓடினேன்.அதன் பிறகு நான் நிற்றுவிட்டேன் அவர்கள் சிறிது நேரத்தில் என்னைக் கடந்து சென்றபோது கைகாட்டி "well done"  என்றார்கள். நானும் கைகாட்டிச் சிரித்தேன். இரண்டு கிலோமீட்டர்கள் நடந்து வீட்டை அடைந்தேன்.


Thursday, February 25, 2021

Messi : Lessons in Style - Jordi Punti



இந்த புத்தகத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக தேடினேன். இந்த புத்தகத்தைப் பற்றி பலர் நல்ல விதமாக கூறியுள்ளனர்.அதிலும் நான் விரும்பி வாசிக்கும் கால்பந்து கட்டுரையாளர்கள் மிகவும் நல்ல விதமாக கூறியிருந்தால் எனக்கு எப்போது இந்த புத்தகம் கையில் கிடைக்கும் என்ற ஏக்கமும் தேடலும் இருந்து கொண்டே இருந்தது. வேறொரு புத்தகத்தை தேசிய நூலக இணையதளத்தில் தேடிக் கொண்டிருந்தபோது திடீரென்று இந்த புத்தகம் ஞாபகத்தில் வந்தது.தேடினேன் புத்தகம் நூலகத்தில் இறக்குகிறது என்று தெரிந்தது. அன்று காலையே நூலகத்திற்கு சென்று இந்தப்  புத்தகத்தை எடுத்தேன். நூலகத்திலிருந்து அலுவலகத்தை அடையும் முன்னரே பாதி புத்தகத்தை வாசித்துவிட்டேன்.

மெஸ்ஸியைப் பற்றி வெளியான புத்தகங்களில் பெருபானவற்றை நான் வாசித்திருக்கிறேன். அவரைப் பற்றி தெரியாத விசயங்கள் என்று பெரிதாக ஏதும் இல்லை இணையத்தில் தேடினாலே அனைத்தும் கிடைக்கும்.ஆனால் இந்த புத்தகம் சற்று வித்தியாசமானது. இது ஒரு ரசிகன் அதுவும் அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் பார்வையில் மெஸ்ஸி விவாதிக்கப்பட்டுள்ளார். உண்மையைச் சொன்னால் இப்புத்தகம் "ode to Messi". இருப்பது ஒன்று குறு அத்தியாகங்களில் மெஸ்ஸியை அணு அணுவாக ரசித்து எழுதியிருக்கிறார் ஜோர்டி. 

ஜோர்டி ஒரு catalan மொழி எழுத்தாளர். பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இவரும் ஒரு உறுப்பினர். கடந்த பத்து வருடங்களில் கேம்ப் நூவ்வில் (camp nou) நடந்த அனைத்து போட்டிகளையும் நேரில் பார்த்தவர்.மைதானத்தில் மெஸ்ஸியின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் எப்படிப் பார்த்தார்கள். அவர்களின் நினைவில் மெஸ்ஸி எப்படி உருமாறுகிறார் என்பதை அற்புதமாக எழுதியுள்ளார்.மெஸ்ஸி விளையாடுவதை நிறுத்தினால் இவர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்றும் ஊகித்து எழுதியிருக்கிறார்.  மரடோனாவா மெஸ்ஸியா ? என்ற கேள்விக்கு எல்லாவிதத்திலும் பதில் தேட முயற்சித்திருக்கிறார். பதினெட்டாவது அத்தியாயத்தில் மெஸ்ஸி மற்றும் ஹாரிப்போட்டார் ஒப்பீடு அருமை. இருவரும் மேஜிக் செய்பவர்கள். அவர்களின் படிப்படியான வளர்ச்சியும் அவர்களோடு வளர்ந்த ரசிகர்கள் எப்படி மெஸ்ஸியை எதிர்கொண்டார்கள் என்பதையும் அழகாக விவரித்துள்ளார் ஜோர்டி .

"I remember" என்ற இருபதாவது அத்தியாயம் தான் எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் மெஸ்ஸியின் கோல்கள் மற்றும் இதர சாதனைகளின் பட்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். ரசித்து ரசித்து தயார் செய்துள்ளார்.2019-ல் நானும் அப்படி ஒரு  பட்டியல் தயார் செய்தேன். விளையாட்டு ரசிகனுக்கு அது ஒரு சுகம். ஒன்பதாவது அத்தியாயத்தில் இட்டாலோ கால்வினோ Six Memos for the Next Millennium புத்தகத்தில் ஒரு நல்ல  இலக்கிய படைப்பு கீழேயுள்ள ஐந்து குணங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

  1. Lightness
  2. Quickness
  3. Exactitude
  4. Visibility
  5. Multiplicity 

ஜோர்டி இந்த ஐந்து குணங்களும் மெஸ்ஸியிடம் இருப்பதாக கூறுகிறார். ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டோடு விளக்கியுள்ளார்.இப்படி ஒரு எழுத்தாளர் ஒரு விளையாட்டு வீரனுக்கு கிடைப்பது பெரும் தவம். அந்த விதத்தில் மெஸ்ஸி அதிர்ஷ்டசாலி. நாமும் தான்.

கால்பந்து ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Wednesday, February 24, 2021

ரன்னிங் டைரி - 178

24-02-2021 08:30

கிழக்கு கடற்கரை பூங்கா 

ஆறு கிலோமீட்டர் வரை கவனம் முழுவதும் மூச்சிலே இருந்தது. ஒரே சீரான வேகத்தில் ஓடினேன். திரும்பி ஓடியபோது அப்படி அமையவில்லை. திரும்பியவுடன் எண்ணத்தில் தோன்றியது எப்போது மீண்டும் running events நடக்கும் என்ற கேள்விதான். கடைசியாக ரேஸில் ஓடியது எப்போது என்று யோசித்துக் பார்த்தேன். எனக்கு ஞாபகத்தில் வரவில்லை.என்னை முந்திக் கொண்டு  ஆறு பேர் அடங்கிய  ஒரு குழு ஓடிச் சென்றது. எனக்கு இப்படி குழுக்களைப் பார்த்தால் அவர்களுடன் சேர்ந்து ஓட ஆசைப் பாடுவேன். இன்றும் அப்படித்தான். அவர்களுக்கு இணையாக வேகத்தைக் கூட்டினேன். அவர்களோடு மூன்று கிலோமீட்டர்கள் ஓடினேன்.மெயின் ரோட்டிற்கு வந்த பிறகு மார்ஸல் ப்ரௌஸ்ட் எண்ணத்தில் தோன்றினார். அவரின் Swann's Way புத்தகத்தைப் பற்றி ஒரு புத்தகம் நேற்று பார்த்தேன்.Swann's Way படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Tuesday, February 23, 2021

ரன்னிங் டைரி - 177

 23-02-2021 08:35

கிழக்கு கடற்கரை பூங்கா 

கடுமையான வெய்யில். பேருந்து நிலையத்தில் இருந்து ஓட ஆரம்பித்தேன்.வாக்மேனில் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாட ஆரம்பித்தார். வீட்டிற்கு அருகில் ஒருவர் என்னைக் கை கட்டி நிறுத்தி "your specs is awesome" என்றார். நான் சிரித்தேன். அவர் "brand ?" என்று கேட்டார். நான் "Rudy Project" என்றேன். அவர் "Oh  I never heard of it" என்றார். நான் "see you" என்று சொல்லிவிட்டு ஓட்டத்தை தொடர்ந்தேன்.நான் அவரை காபி கடையில் சில தடவை பார்த்திருக்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் கண்ணாடி போடுவதென்றாலே ஒருவிதமான கூச்சம் ஒட்டிக் கொண்டுவிடும். யாரும் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று எண்ணிக் கொண்டே ஓடுவேன். படிப்படியாக அது மாறி இப்போதெல்லாம் கண்ணாடி போடாமல் ஓடுவதே இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டேன். நான் வாங்கிய முதல் கண்ணாடி ஞாபகத்தில் வந்தது.அது இன்னும் என்னிடம் இருக்கிறது. எப்போதாவது போட்டுக் கொள்வேன்.  கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்த போது சென்ற வாரம் பார்த்த பெரியவர் நடந்து வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்து சிரித்தார்.நானும்  சிரித்தேன். பாடலில் கவனம் சென்றபோது "அடி ஆத்தாடி .." என்று ஜானகியும் இளையராஜாவும் பாடிக் கொண்டிருந்தனர். ஏனோ அப்போது நேற்றுப் பார்த்த இயக்குநர் ரத்னகுமாரின் பேட்டி ஞாபகத்தில் வந்தது. என்னத்த சொல்ல .. என்று எண்ணிக் கொண்டேன்.என் முன்னே ஓடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வேகத்தைக் அதிகரித்தார் நானும் அவருக்கு இணையாக ஓட வேண்டுமென்று முடிவு செய்து வேகத்தை அதிகரித்தேன். அவர் கிழக்கு கடற்கரை பூங்காவை விட்டு வெளியே செல்லும்வரை அவருக்கு இணையாக ஓடினேன். அதன் பிறகு மெயின் ரோட்டில்  சைக்களின் பின்னல் ஓடி வீடை அடைந்தேன்.

The Standardization of Demoralization Procedures - Jennifer Hofmann

 


இந்த ஆண்டு நான் வாசித்து முடித்த முதல் ஆங்கில நாவல். வழக்கம்போல நூலகத்தில் தேடியபோது கிடைத்த புத்தகம். இதற்கு முன் இந்த புத்தகத்தைப் பற்றி நான் வாசித்ததோ கேட்டதோ கிடையாது. இப்படி எதுவும் தெரியாமல் நூலகத்தில் எடுத்து படித்தப் புத்தங்கள் என்றுமே என்னை ஏமாற்றியது கிடையாது. இந்த புத்தகமும் அப்படித்தான். எடுத்த உடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே வாசிப்பில் முடித்து விடலாம். 

1989-ல்  கிழக்கு பெர்லினில் லாரா என்ற பெண் திடீரென்று காணாமல் போய்விடுகிறாள். அவளைத் தேடும்  Bernd Zeiger-ன் கதை தான் இது. இந்த Bernd Zeiger ஒரு stasi போலீஸ் அதிகாரி .பல வருடங்களுக்கு முன் அரசாங்கத்திற்கு எதிராக செய்யப்படுபவர்களை எப்படி demoralize செய்வது பற்றி புத்தகம் எழுதி பெயர் பெற்றவர். லாராவை தேடும் போது அவர் தனது பழைய நினைவுகளுக்குச் செல்கிறார். அவர் திருமணம் ஆகாதவர்.  அவரின் ஒரே நட்பு லாராதான். அவளே அவரின் எண்ணங்களை அக்கிரமித்திருந்தாள். தனிமையின் துயரத்தை மிக நுட்பமாக பல கதாப்பாத்திரங்கள் மூலம் சொல்லிச் செல்கிறார்.  அதுவம் எப்போதும் அரசால் கண்காணிக்கப்படும் தனிமை.

 பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு சென்ற ஜெர்மனிய விஞ்ஞானி Held தேசத் துரோக குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கும் Bernd Zeiger-க்கும் ஒருவிதமான நட்பு உருவாகிறது. உண்மையில் அவர்கள் இருவரும் இரு துருவங்கள். நட்பாக பழகி Held-ஐ ஏமாற்றுகிறார் Zeiger. ஜெர்மனியின் கம்யூனிச அரசின் இறுதி நாட்களில் நடந்த சம்பவங்கள் மிகவும் கொடுமையானது.ஹிட்லர் மேற்கு ஜெர்மனியின் உருவாக்கம் என்று சொல்லியே அரசு மக்களைத் தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.இக்கதையில் அந்த நேரத்தில் மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை ஒரு த்ரில்லர் போல சொல்கிறார் ஜெனிபர்.மனிதர்களை பல இடங்களில் விலங்குகளின் குணங்களை கொண்டு விவரிக்கிறார்.பல இளைஞர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.  திடீரென்று எப்படி பலர் காணாமல் போகிறார்கள் என்பதை எண்ணும் Bernd Zeiger அதற்கும் Held-ற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று சந்தேகப் படுகிறார். சந்தேகத்தை தீர்க்க அவர் செய்யும் செயல்களே கதையின் மீதி. அவர் எழுதியே புத்தகமே அவரை நிலைகுலைய வைக்கிறது.

Bernd Zeiger - dark and haunting. அவர் எப்போதும் சமநிலையில் இல்லமால் இருப்பது போல ஒரு பிம்பம் ஆனால் அவர் அப்படியொன்றும் இல்லை. இக்கதையை ஒரு science fiction என்றும் கூறலாம். ஒரு நாளின் நிகழ்வுகள் மூலம் கதையை நகர்த்தியது இந்த கதைக்கு நல்ல உத்தி. அதனாலேயே வாசகருக்கு ஒருவித பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இது மற்ற திரில்லர் மாதிரி இல்லை. ஒரு விதமான dull திரில்லர் (இதுவே ஒரு முரண்பாடு). கிறிஸ்தவ மதத்தின் குறியீடுகள் அங்கங்கே வந்து கொண்டே இருக்கின்றன். நம்பிக்கையையும் ஒருவனின் மனசாட்சிக்கு புறம்பான செயலையும் அது கேள்வி கேட்கிறது. வாசித்து முடித்த பின்னரும் Bernd Zeiger என்னை சுற்றிக் கொண்டே இருக்கிறார்.  நான் அவரிடம் கேள்விகள்  கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

வாசிக்கலாம்.


Monday, February 22, 2021

ரன்னிங் டைரி - 176

22-02-2021 08:30

கிழக்கு கடற்கரை பூங்கா 

கடந்த இரண்டு வாரங்களில் ஐந்து தடவை ஓடினேன். ஆனால் அதைப் பற்றி எழுத முடியாமல் போய்விட்டது . இன்று ஓட ஆரம்பித்தவுடன் "கண்டா வரச் சொல்லுங்க" பாடலை play செய்தேன். அந்த அம்மாளின் குரல் வசீகரமானது.எனக்கு ஏனோ அந்த பாடலின் இசைப் பிடிக்கவில்லை. வீடியோ பார்த்தபோது இருந்த புல்லரிப்பு பாடல் கேட்கும்போது இல்லை.அந்த பாட்டு முடிந்தவுடன் சாருநிவேதிதாவின் தேகம் நாவலின் சிதரவதைக் காட்சிகள் வந்தது. திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது. ச்சே என்ன இது என்று எண்ணி நின்றுவிட்டேன். பீத்தோவனிடம் சரணடைவது என்று முடிவு செய்து ஐந்தாவது சிம்பனியை play செய்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் இசையிலேயே இருந்தது.பீத்தோவனுக்கு நன்றி சொல்லி ஓடி முடித்தேன்.

Monday, February 1, 2021

ரன்னிங் டைரி - 175

01-02-2021 08:50

கிழக்கு கடற்கரை பூங்கா 

நல்ல வெய்யில்.  ஓட ஆரம்பித்ததே சற்று வேகத்துடன் தான். 22 நிமிடத்தில் ஐந்து கிலோமீட்டரை கடந்திருந்தேன். இப்படியே கண்டிப்பாக தூரம் முழுமைக்கும் ஓட முடியாது என்று எனக்குத் தெரியும் அதனால் ஐந்து கிலோமீட்டருக்கு சற்று கூடுதலாக ஓடியவுடன் வேகத்தைக் குறைத்தேன். ஏழு கிலோமீட்டருக்குள் மூச்சு வாங்கியது.மேலும் வேகத்தைக் குறைத்தேன்.எதிரே சென்ற வாரம் பார்த்த தாத்தா ஓடி வந்து கொண்டிருந்தார். நான் கை காட்டினேன். அவரும் அதையே செய்தார். நான் அவரைக் கடந்து சென்றேன்.அப்போதுதான் காதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு கவனம் சென்றது "Right Round -Flo Rida" ஓடிக் கொண்டிருந்தது. shuffle-லில் போடும்போது பல மாதங்களுக்கும் மேலாக இந்த பாடல் வந்ததே இல்லை. இன்றுதான் வந்தது. இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் சில வருடங்களுக்கு முன் என்னோடு வேலைப் பார்த்தவர் தான் ஞாபகத்தில் வருவார். அவர்தான் இந்த பாடலை எனக்கு அறிமுகப் படுத்தினார். அவர் இப்போது எங்கு இருக்கிறாரோ என்று எண்ணிக் கொண்டேன்.பாடலில் இருந்து கவனம் எதிரே நடந்து வந்து கொண்டிருந்த இரு இந்தியவர்கள் மீது சென்றது. அவர்கள் சத்தமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு வந்தனர். அதைக் கேட்டவுடன் அரவிந்தன் கண்ணையன் அவர்களின் நேற்றைய முகநூல் பதிவுதான் ஞாபகத்தில் வந்தது. அந்த பதிவு ஒரு வகையான உரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது. வீட்டிற்கு சென்று பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டேன். பத்தாவது கிலோமீட்டரிலிருந்து ஓட முடியவில்லை. நடந்தே வீட்டை அடைந்தேன்.