Tuesday, February 23, 2021

The Standardization of Demoralization Procedures - Jennifer Hofmann

 


இந்த ஆண்டு நான் வாசித்து முடித்த முதல் ஆங்கில நாவல். வழக்கம்போல நூலகத்தில் தேடியபோது கிடைத்த புத்தகம். இதற்கு முன் இந்த புத்தகத்தைப் பற்றி நான் வாசித்ததோ கேட்டதோ கிடையாது. இப்படி எதுவும் தெரியாமல் நூலகத்தில் எடுத்து படித்தப் புத்தங்கள் என்றுமே என்னை ஏமாற்றியது கிடையாது. இந்த புத்தகமும் அப்படித்தான். எடுத்த உடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே வாசிப்பில் முடித்து விடலாம். 

1989-ல்  கிழக்கு பெர்லினில் லாரா என்ற பெண் திடீரென்று காணாமல் போய்விடுகிறாள். அவளைத் தேடும்  Bernd Zeiger-ன் கதை தான் இது. இந்த Bernd Zeiger ஒரு stasi போலீஸ் அதிகாரி .பல வருடங்களுக்கு முன் அரசாங்கத்திற்கு எதிராக செய்யப்படுபவர்களை எப்படி demoralize செய்வது பற்றி புத்தகம் எழுதி பெயர் பெற்றவர். லாராவை தேடும் போது அவர் தனது பழைய நினைவுகளுக்குச் செல்கிறார். அவர் திருமணம் ஆகாதவர்.  அவரின் ஒரே நட்பு லாராதான். அவளே அவரின் எண்ணங்களை அக்கிரமித்திருந்தாள். தனிமையின் துயரத்தை மிக நுட்பமாக பல கதாப்பாத்திரங்கள் மூலம் சொல்லிச் செல்கிறார்.  அதுவம் எப்போதும் அரசால் கண்காணிக்கப்படும் தனிமை.

 பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு சென்ற ஜெர்மனிய விஞ்ஞானி Held தேசத் துரோக குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கும் Bernd Zeiger-க்கும் ஒருவிதமான நட்பு உருவாகிறது. உண்மையில் அவர்கள் இருவரும் இரு துருவங்கள். நட்பாக பழகி Held-ஐ ஏமாற்றுகிறார் Zeiger. ஜெர்மனியின் கம்யூனிச அரசின் இறுதி நாட்களில் நடந்த சம்பவங்கள் மிகவும் கொடுமையானது.ஹிட்லர் மேற்கு ஜெர்மனியின் உருவாக்கம் என்று சொல்லியே அரசு மக்களைத் தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.இக்கதையில் அந்த நேரத்தில் மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை ஒரு த்ரில்லர் போல சொல்கிறார் ஜெனிபர்.மனிதர்களை பல இடங்களில் விலங்குகளின் குணங்களை கொண்டு விவரிக்கிறார்.பல இளைஞர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.  திடீரென்று எப்படி பலர் காணாமல் போகிறார்கள் என்பதை எண்ணும் Bernd Zeiger அதற்கும் Held-ற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று சந்தேகப் படுகிறார். சந்தேகத்தை தீர்க்க அவர் செய்யும் செயல்களே கதையின் மீதி. அவர் எழுதியே புத்தகமே அவரை நிலைகுலைய வைக்கிறது.

Bernd Zeiger - dark and haunting. அவர் எப்போதும் சமநிலையில் இல்லமால் இருப்பது போல ஒரு பிம்பம் ஆனால் அவர் அப்படியொன்றும் இல்லை. இக்கதையை ஒரு science fiction என்றும் கூறலாம். ஒரு நாளின் நிகழ்வுகள் மூலம் கதையை நகர்த்தியது இந்த கதைக்கு நல்ல உத்தி. அதனாலேயே வாசகருக்கு ஒருவித பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இது மற்ற திரில்லர் மாதிரி இல்லை. ஒரு விதமான dull திரில்லர் (இதுவே ஒரு முரண்பாடு). கிறிஸ்தவ மதத்தின் குறியீடுகள் அங்கங்கே வந்து கொண்டே இருக்கின்றன். நம்பிக்கையையும் ஒருவனின் மனசாட்சிக்கு புறம்பான செயலையும் அது கேள்வி கேட்கிறது. வாசித்து முடித்த பின்னரும் Bernd Zeiger என்னை சுற்றிக் கொண்டே இருக்கிறார்.  நான் அவரிடம் கேள்விகள்  கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

வாசிக்கலாம்.


No comments: