Thursday, November 28, 2019

The Costliest Pearl - Bertil Lintner


சீனா எப்படி இந்தியப்  பெருங்கடலைச் சுற்றி பாதுகாப்பு மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய புத்தகம்.அதிபர் சீயின் கனவான "Belt and Road Initiative" திட்டத்தின்படி சீனா மிக விரைவாக அனைத்து துறையிலும் குறிப்பாக வெளிவுறவில் முன்னேரி வருகிறது. கிட்டத்தட்ட தெற்கு சீன கடல் முழுவதையும் சீனா தன்னுடையதாகிக் கொண்டது. அடுத்து இந்திய பெருங்கடல்.

காலங்காலமாக இந்தியாவிற்கு இந்திய பெருங்கடல் தனக்குத்தான் என்பதில்  எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சமீப காலமாக சீனா இந்தியப் பெருங்கடலில் உள்ள  சிறு தீவு நாடுகளை தனது பண மற்றும் கட்டுமான உதவிகள் மூலம்தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.சீனா எந்தொரு நாட்டிற்கும் எதையும் இலவசமாக செய்யாது. ஏர்போர்ட் ,பள்ளிகள் , மருத்துவமனைகள் சாலைகள் இப்படி பல பணிகள் செய்வதற்கு கடன் மட்டும் கொடுக்காமல் அவைகளை செய்வதற்கு சீனர்களை மட்டும்தான் பயன்படுத்துகிறது.மற்றொரு முக்கியமான விசயம் சீனா தான் காட்ட உதவும்  ஏர்போர்ட் மற்றும் துறைமுகங்களின் நிருவாகத்தை 80% சதவீதத்தை தன் கையில் வைத்துக் கொள்கிறது.

இந்திய பெருங்கடலில் உள்ள பெரும்பான்மையான சிறிய நாடுகள் வறுமையில் உள்ளன அதிலும் நிலையான அரசில்லாமலும் இருக்கிறது. இந்த சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. சீனா "Debt-trap diplomacy" மூலம் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா (Hambantota) துறைமுகம். இலங்கை கடனைத் திருப்பிக் கொடுக்காதலால் தற்போது சீனா அந்த துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. இது போல பல ஆப்ரிக்க நாடுகள் சீனாவின் பிடியில் சிக்கியுள்ளது.

பெர்டில் இந்திய பெருங்கடலில் உள்ள ஒவ்வொரு நாடுகளையும்  அதன்  இந்திய சீன உறவுவின் அடிப்படையில் விளக்குகிறார்.வெகுகாலமாக இந்தியாவின் பக்கம் இருந்த மியான்மார் மெதுவாக சீனாவின் பக்கம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை வாசிக்கும்போது ராஜதந்திரம் என்றால் இப்படித்தான் இருக்கும்போல என்று யோசிக்க வைக்கிறது. இந்தியா மியன்மாரின் ஒரு இனக் குழுவிற்கு ஆயுதம் வழங்கியது என்பது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. மாலத்தீவிலும் சீனா இந்தியாவின் ஆதிக்கத்தை உரசி  பார்க்க ஆரம்பித்துவிட்டது.

இந்தியா சீனாவின் "Belt and Road Initiative" திட்டத்தை எதிர்க்கிறது ஆனால் குஜராத்தில் சீனா தொழிற் பூங்காவை தொடங்கவிருக்கிறது!  இதற்கு எப்படி அரசு அனுமதி அளித்தது என்பது புரியாத புதிர். மொரீசியஸ் மற்றும் ஸ்கைசெல்ஸ் இன்னும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடுகள்தான் ஆனால் அது எவ்வளவு காலத்திற்கு என்று இப்போது கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.  இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு பெரிய  ராணுவ முகாம் இல்லை. இந்த இரண்டு நாடுகளில் ஒன்றில் இந்தியா ராணுவ முகாம் தொடங்க பெரும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சீனாவோ டிஜிபோட்டியில் (Djibouti) அமெரிக்க இராணுவ முகாமிற்கு அருகிலேயே தனது நவீன இராணுவ முகமை 2017-ல் தொடங்கியுள்ளது.

சீனாவின் இந்திய பெருங்கடல் நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்கு இந்திய "சாகர் மாலா " என்ற திட்டத்தைத் தீட்டி இந்திய கடல் எல்லைகளை பலப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் என்ன பிரச்சன்னை என்றால் இந்த திட்டத்தால் வரும் இழப்புகளை மக்களிடம் சொல்லாமலிருப்பதுதான். பல லட்ச மக்கள் வாழ்வாதாரம் கடலை நம்பியுள்ளது ஆனால் இந்திய அரசோ அவர்களிடம் எதையும் கேட்டதாக தெரியவில்லை. பாதிக்கப்படும் மக்களிடம் கேட்காமல் முடிவு செய்தல் என்ன மாதிரி விளைவு வரும் என்பதற்கு பல நாடுகளில் நடக்கும் சீன எதிர்ப்பே நல்ல உதாரணம்.

பெர்டில் இந்த பட்டு பாதை (silk route) என்ற சொல்லே சமீபத்தில் தான் உபோயகத்தில் வந்தது என்கிறார். "Belt and Road Initiative" திட்டத்தை பிரபலப் படுத்துவதற்கும் அந்த திட்டம் சரிதான் என்பதற்கும் சீனா இந்த தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என்கிறார்.Silk Route என்ற வார்த்தை ஐரோப்பியர்களால் தான் பிரபலப் படுத்தப்பட்டது என்கிறார்.அது "seidenstrassen" என்ற  ஜெர்மன் வார்த்தையின் மொழிபெரியர்ப்பு என்கிறார். இது எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது சீனா சொல்லும் "Maritime Silk Route " என்பதற்கு வரலாற்று பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. சீனாவின் ஒரே பழங்காலப் கடல் பயணம் ஷெங் ஹி (Zheng He) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது தான் என்கிறார். அவரும் இப்போது சீனா கூறும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றவர் அல்ல.சீயின் கனவு நிறைவேறுமா? இந்தியா இந்திய பெருங்கடலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமா?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

No comments: