Tuesday, November 12, 2019

ரன்னிங் டைரி -29

09-11-2019 05:18
கிழக்கு கடற்கரை பூங்கா

நேற்றே இன்று கண்டிப்பாக ஓட வேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன். ஓட தொடங்கியபோது "முத்து மணி மாலை" ஆரம்பித்தது. எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அப்படியே "சின்ன கவுண்டர்" படம் மனதில் தோன்றியது. நான் எப்போது அந்த படம் முதலில் பார்த்தேன் என்று ஞாபகமில்லை. இப்போது இந்த படம் மனதில் வரக் காரணம் ஏதோ ஒரு சேனலில் "சின்ன கவுண்டர்" ,"தேவர் மகன் " போன்ற படங்களுக்கு பெரிதாக ஏதும் எதிர்ப்பு வரவில்லை ஆனால் "அசுரன்" பரியேறும் பெருமாள்" போன்ற படங்களுக்கு ஏன் பெரிய எதிர்ப்பு வருகிறது என்று ஒருவர்  கேட்டார். உண்மைதானே!  அசுரன் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மனதில் ஓடியது. என்ன ஒரு வெறித்தனம். அந்த மனிதனின் வாழ்நாள் கோபம்.தனுஷ் ஒரு மகா நடிகன்.

பெடோக் ஜெட்டியை (jetty) தாண்டும்போதுதான் கவனித்தேன் என்னை தொடர்ந்து ஒருவர் என் பின்னால்  ஓடி வந்து கொண்டிருந்தார். நான் வேகத்தைக் அதிகரித்தேன்.அவரும் அதிகரித்தார்.இப்படியே அடுத்த நான்கு கிலோமீட்டர் ஓடினோம். நான் அவர் என்னைத் தாண்டி ஓடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன்.முடிவில் அவர் நின்றுவிட்டார். நான் திரும்பி வரும்போது அவரைப் பார்த்து கை அசைத்தேன் அவரும் திரும்பி சிரித்தார். நன்றாக விடிந்துவிட்டது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை பூங்காவில்  வரவர கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேறு எங்கு சென்று ஓடலாம் என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: