Monday, May 25, 2020

கொரோனா நாட்கள் - ரேடியோ நாட்கள்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் என் முதலாளிக்கு வாட்சப் செய்தி அனுப்பினேன். அவர் வேலை ஏதும் செய்ய வேண்டாம் நான்றாக ஓய்வு எடுமென்று செய்தி அனுப்பினார்.நான் எதிர்பார்த்த பதில் தான். மனைவி மடியிலேயே இருங்கள். நான் சாப்பாடெல்லாம் அங்கு கொண்டுவந்துறேன் என்றாள். அடுத்த பத்து நாட்களில் கீழே வந்தது ஓரிரு முறைதான்.

அந்த பத்து நாட்களும் எனது  துணையாக இருந்தது ரேடியோவும் புத்தகமும் தான். கல்லூரி நாட்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக மணிக்கணக்காக ரேடியோ கேட்டது அந்த நாட்களில் தான். "கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க" கல்லூரி நாட்களில்தான் இந்த மந்திர வாக்கியம் முதன் முதலாக ஒலிக்க ஆரம்பித்தது. சூரியன் FM அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட எல்லாக் கடைகளிலும் சூரியன் FM ஒலித்தது. தொகுப்பாளர்களைப்  பற்றி தங்களுக்கு நெருங்கியவர்கள் போல பேசுவார்கள். கையில் பணம் இல்லாத நேரத்தில் எங்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சூரியன் FM கேட்பதுதான். இந்த நோயின் நாட்களும் ரேடியோவில் தான் கழிந்தது.

காலையில் எழுந்தவுடன் சேனல் நியூஸ் ஆசியாவின் FM-ன் செய்திகள் அதை தொடர்ந்து கிளாஸ் 95-ல் ஆங்கில பாடல்கள் குறிப்பாக தொகுப்பாளர்களின் அரட்டை எனக்கு பிடித்தது. அதனை தொடர்ந்து ஒலி FM-ல் தமிழ் பாடல்களை மதிய உணவுவரை கேட்பேன். மதியம் தூங்குவதற்கு முன் சிம்பொனி FM-ல்  ஏதாவது சிம்பொனி இசைக் தொகுப்பு. அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவேன். மூன்று மணிபோல் மீண்டும் ஒலி FM-ல் பாடல்களுக்கு திரும்புவேன். அதில் மலையாளம் ,ஹிந்தி மற்றும் தெலுங்கு பாடல்கள் ஒலிபரப்பாகும். பல நாட்கள் இந்த பகுதியில் ஒலிபரப்பான வேற்று மொழி பாடல்கள் எதுவும் எனக்கு தெரிந்ததில்லை. இருந்தாலும் கேட்பேன். பாடல்களின் தொகுப்பு இன்னும் மேம்பட வேண்டும். டீ குடிக்கும் நேரத்தில் கிஸ்92 FM-ல் ஆங்கில பாடல்களுக்கு செல்வேன்.நல்ல பாடல்கள் ஒலிபரப்பாகும்.

சாயங்காலம் மீண்டும் சேனல் நியூஸ் ஆசியாவின் FM-ன் செய்திகளுக்குச் செல்வேன். அதையே  இரவு உணவுவரை கேட்பேன்.தூங்குவதற்கு முன் மீண்டும்  ஒலி FM-ல் தமிழ் பாடல்களைக்  கேட்பேன். நேயர் போனில் அழைத்து அவர்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்கும் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடித்தது. அதற்கு காரணம் அழைப்பவர் மற்றும் தொகுப்பாளருக்கு இடையே நடக்கும் உரையாடல்கள்தான். எனக்கு பிடித்த சில உரையாடல்கள் :

தொகுப்பாளர் : உங்களுக்கு என்ன பாட்டு வேணும் ?
அழைத்தவர் :TMS -ன் ஏதாவது ஒரு பாட்டு .
தொகுப்பாளர் :புதுப்பாட்டு எதுவும் புடிக்காத?
அழைத்தவர் : நான் கடைசியா 1971-ல் தான் படம் பார்த்தேன்.
தொகுப்பாளர் :என்னது ??!! உண்மையாவா?
அழைத்தவர் : உண்மையிலேயே  நான் படம் பார்த்த பல வருஷம் ஆயிட்டு .
தொகுப்பாளர் : பாட்ஷா பாக்கல ? எந்திரன் ? 
அழைத்தவர் : வடிவேலு காமெடி மட்டும் அப்ப அப்ப டீவில பாப்பேன்.
தொகுப்பாளர் : நம்பவே முடியல ?!

எனக்கும் ஆச்சிரியமாக இருந்தது.  2020-ல் இப்படி ஒருவர். அவரது குரலில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை. மிக சாதாரணமாக பேசினார். ஒரு புதுப் படத்தை பார்க்க வில்லை என்றால் நமக்கு ஒரு குற்றயுணர்ச்சி வருகிறது ஆனால் அவரோ திரைப்படங்களை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை அது எப்படி சாத்தியமாகும் என்று இரவு முழுக்க யோசித்தேன். மற்றொரு உரையாடல் :

தொகுப்பாளர் : உங்களுக்கு என்ன பாட்டு வேணும் ?
அழைத்தவர் : ஏதாவது பழைய பட்டு போடுங்க .
தொகுப்பாளர் : வீட்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?
அழைத்தவர் : அம்மாவோடு நெறைய நேரம் பேசிக்கிட்டு இருக்குறேன் .
தொகுப்பாளர் :இந்த ciruit breaker முன்னாடி தனியா இருந்திங்களா?
அழைத்தவர் : இல்ல . அம்மாவோடுதான் இருந்தேன் ஆனா வேலையில  
                              ரெம்ப பிசி  அதனால அம்மாவோட சரியா பேசவே இல்ல .   
                              இப்ப  பேசிக்கிட்டே இருக்கோம். (சிரிக்கிறார்).
தொகுப்பாளர் : அம்மா என்ன சொல்றாங்க ?
அழைத்தவர் :  அம்மாவுக்கு ரெம்ப சந்தோசம்.

இந்த சின்ன உரையாடல் என்னுள் பல  எண்ணங்களை எழுப்பியது. அம்மாக்கள் எப்போதும் அப்படித்தான் அவர்களுக்கு பிள்ளைகளைப் பற்றித் தெரியும்.

தொகுப்பாளர் :இந்த ciruit breaker முடித்தவுடன் யாரை முதலில் 
                                கட்டிப்பிடிக்கமாட்டீர்கள் ?
அழைத்தவர் : என் முதலாளியை .
தொகுப்பாளர் : ஏன் அவர் ?
அழைத்தவர் : அவருக்கு நாங்கள் வேலை செய்யும் ஒரு நபர் .thats all .
தொகுப்பாளர் : இப்போது அவர் இதைக் கேட்டு கொண்டிருந்தாரென்றால் 
                                என்னவாகும்?
அழைத்தவர் :  ஒன்றும் ஆகாது . என் பெயரில் நூற்றுக்கணக்கான பேர் 
                              இருக்கிறீரார்கள்.

என்னமோ இந்த உரையாடல் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. என் பாஸ் எங்களை முதலில் ஒரு மனிதனாக மதிப்பவர். எங்களுக்கும் உணர்வுகள் குடும்பம் இருக்கிறது என்பதை நன்கு அறிந்து அதற்கேற்றாற்போல் எங்களை வழிநடத்துவார். professional மற்றும் personal என்பதை மிக தெளிவாக புரிந்து கொண்டவர். இரண்டையும் குழப்பமே இல்லமால் எங்களுக்கு எடுத்துச் சொல்வார். நான் IT-ல் இருக்கும் பலரிடம் பேசியிருக்கிறேன் பெரும்போலானோர் அவர்களின் முதலாளி  மற்றும் மேனேஜர்களை "அவன் ஒரு மனுஷனே இல்ல" என்று சொல்வதைக் கேட்டுருக்கிறேன். ஏன் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை நன்றாக நடத்த முடியவில்லை என்பது ஒரு பெரிய கேள்விக் குறிதான். 

இந்த பத்து நாட்களில் நான் நிறைய பழைய தமிழ் மற்றும் ஆங்கில பாடல்கள் கேட்டேன். TM சௌந்தராஜன் அவர்களின் பாடல்களை பல தடவை கேட்டதுண்டு ஆனால் இந்த பத்து நாட்களில் தான் அவரின் சிறப்பு புரிந்தது. பாடல் வரியில் இருக்கும் உணர்ச்சிகளை அவரைப் போல் எந்த பாடகரும் கொண்டு வந்ததாக எனக்கு தெரியவில்லை. AM ராஜா மற்றும் PB ஸ்ரீனிவாஸ் இருவரின் பாடல்களை முன்பு கேட்டிருக்கிறேன் ஆனால் இப்போதுதான் அவர்களின் தனிச் சிறப்பு கொச்சமாவது எனக்கு தெரிகிறது. எனது ரன்னிங் வாக்மேனில் இவர்களின் பாடல்களை ஏற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.பல வருடங்களுக்குப் பிறகு எல்விஸ் பிரெஸ்லியின் பாடல்களைக் ரேடியோவில் கேட்டேன்.

இனிமேல் ரேடியோ தினமும் கேட்க வேண்டுமென்று முடிவு செய்து listenme மொபைல் ஆப்பை இன்ஸ்டால் செய்து விட்டேன். ரேடியோ கேட்பது ஒரு அலாதியான அனுபவம் என்பதை இந்த நாட்கள் நிரூபித்து விட்டன.

No comments: