Sunday, May 17, 2020

கொரோனா நாட்கள் - மருத்துவமனை

என்ன ஆச்சு ? என்று ரிசப்னிஸ்ட் கேட்டார். நான் "feeling feverish" என்று சொன்னேன். உடனே தெர்மாமீட்டர் எடுத்து நெற்றியின் அருகில் கொண்டு சென்று "உங்களுக்கு காய்ச்சல் இல்லையே!" என்றார். நான் "எனக்கு காய்ச்சல் இருக்குற மாதிரியே இருக்கு " என்றேன். அவர் "சரி அடுத்து நீங்கள் டாக்டரை பாருங்கள்" என்றார். பத்து நிமிடத்திற்கு பிறகு டாக்டர் என்னை அழைத்தார்.  நான் "feeling feverish" என்றேன். வேறென்ன செய்கிறது என்றார். நான் "feeling tired" என்றேன்.தொண்டையயும் காதையும் பரிசோதித்து விட்டு எல்லாம் நான்றாகத்தான் தெரிகிறது என்றார். கம்ப்யூட்டரை பார்த்து விட்டு "எதுக்கும் இரத்த பரிசோதனை செய்து பார்ப்போம் "என்றார். நான் "சரி டாக்டர் ,மலேரியாவிற்கும் பரிசோதனை செய்யுங்கள்" என்றேன். அவர் சரி என்று சொல்லிவிட்டு என் கரங்களில் இருந்து இரத்தம் எடுக்க ஆரம்பித்தார். "மதியம் முடிவு வந்து விடும், போனில் அழைக்கிறேன்" என்றார். நான் வெளியே வந்து பணத்தைக் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

மதியம் மூன்று மணிக்கு அழைப்பு வந்தது. "உங்களுக்கு எல்லாம் நான்றாகத்தான் இருக்கிறது, நான் ஒரு specialist டாக்டருக்கு கடிதம் தருகிறேன் அவரைச் சென்று பாருங்கள் " என்றார். நான் "சரி" என்றேன். சாயங்காலம் அந்த specialist டாக்டரை பார்க்க சென்றேன். அது ஒரு பெரிய மருத்துவமனை வீட்டிற்கு அருகில் தான் இருக்கிறது ஆனால் அங்கு மருத்துவம் பார்த்ததில்லை. வெளியிலேயே கொரோனா பாதுகாப்பு காரணமாக  temperature பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை பரிசோதித்தப்போது  எனக்கு 37.6 இருந்தந்து .உடனே என்னை தனிமைப் படுத்தினர். கார் பார்க் அருகில் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்றனர். மீண்டும் temperature பார்த்தனர். இரண்டு form-ளை நிரப்பச் சொன்னார்கள் .நான் அதைச் செய்தேன். டாக்டர் வரும்வரை நீங்கள் இந்த பகுதியில் தான் இருக்க வேண்டுமென்று ஒரு temporary அறையைக் காட்டினார்கள். நான் அங்கு சென்று அமர்ந்தேன்.இங்கு ஒன்று சொல்ல வேண்டும் .அங்கிருந்த இரண்டு நரசுகளும் தேவைதையின் மறு உருவம்  என்று எனக்கு தோன்றியது. கண்களில் கருணை பேச்சில் தெளிவு அதுவே எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது. "கவலைப் பட வேண்டாம் , உங்களுடைய நோய் அறிகுறிகள் ஏதும் கொரோனா மாதிரி தெரியவில்லை" என்றார்கள். நான் கையில் "Love Songs - Sonnets " புத்தகம் இருந்ததைப் பார்த்து இருவரும் சிரித்தனர்.

பதினைந்து நிமிடம் கழித்து டாக்டர் வந்தார். பார்த்தவுடன் தெரிந்தது இந்தியர் என்று. காலையில் டாக்டர் கேட்ட அதே கேள்விகளை இவரும் கேட்டார். பதில் சொன்னேன். அவர் "இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் ஆனால் இன்று முடியாது நாளைதான் அதுவம் நீங்கள் மருத்துவமனையில் அனுமதித்தப் பின்னால்" என்றார். நான் வருத்தப் படுவதை கவனித்த டாக்டர் "கவலைப் பட வேண்டாம்,கொரோனா தடுப்பின் ஒரு பகுதியே இது" என்றார். எவ்வளவு செலவாகும் என்ற கேட்டேன் .அவர் "உங்களுக்கு ஆயுள்காப்பு இருக்கிறதா?" என்று கேட்டார்.  நான் "தனியார் மருத்துவமனையென்றால் 60% தான் " என்றேன். அதற்கு அவர் "இங்கு செலவு கூடுதல் வரும் அரசு மருத்துவமனைக்கு செல்கிறீர்களா?" என்று கேட்டார். நான் "வீட்டில் கேட்டு சொல்கிறேன்" என்றேன். நாளை வருவதாக இருந்தால் "அனுமதித்து சிகிச்சை எடுப்பதற்கு தயாராக வரவும்" என்று சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியே சென்றார். நானும் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டு வீடு திரும்பினேன்.

வீட்டில் பேசி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற முடிவு செய்து அடுத்த நாள் காலையில் மருத்துவமனைக்கு சென்றேன். வெளியில்  நான் அந்த டாக்டரை பார்க்க வந்ததாக சொன்னேன். அவர் temperature பார்த்து விட்டு "ஒன்றும் இருக்காது சென்று டாக்டரை பாருங்கள்" என்றார். மூன்றாவது மாடிக்கு சென்றேன். நான்தான் வரிசையில் முதல் நபர். வெளியே இருந்த பெண் எனது விவரங்களை கேட்டுப் பெற்றுக் கொண்டார். அவரின் முகத்திலும் அமைதியின் சிரிப்பு. டாக்டர் அழைத்தார் உள்ளே சென்றேன். "கண்டிப்பாக இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் . மருத்துவமனையில் அனுமதிக்க தயாரா? என்று கேட்டார். நான் " தாயார் டாக்டர் " என்றேன். உடனே அனுமதி formல் கையெழுத்துப் போடச் சொன்னார் . நானும் கையெழுத்திட்டேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் நான் பணம் செலுத்தும் அறையில் இருந்தேன். அவர்கள் estimated amount என்று சொல்லி ஒரு தொகையை பெற்றுக் கொண்டனர். அங்கிருந்து அடுத்த பத்து நிமிடத்தில் ICU பிரிவில் ஒரு அறையில் நான் இருந்தேன். சாதாரண அறைகள் அனைத்தும் ஏற்கனவே நோயாளிகள் இருப்பதால் என்னை ICU-விற்கு மாற்றியதாக சொன்னார்கள். ICU-ல் இருப்பது இதுவே எனக்கு  முதல் முறை.

படுக்கையில் படுக்க சொல்லிவிட்டு ஒருவர் வெளியே சென்றார். ஐந்து நிமிடங்கள் கழித்து அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்தான் ICU-வின் அன்றைய தலைமை நர்ஸ். ஒரு tablet-ஐ  கொடுத்து மதிய உணவை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நானும் mixed-vegetable சூப்பும் ,tofu சாதம் மற்றும் மசாலா டீ தேர்வு செய்து கொடுத்தேன். அவர் "நல்லா சாப்பிட வேண்டும்" என்றார். வெளியே சென்றவர் மீண்டும் வந்து "சிறிது நேரம் கழித்து இரத்தம் எடுக்க நர்ஸ் வருவார்கள்" என்றார். அவர் சொன்னது போலவே அவரும் அவருடன் இரண்டுபேரும் வந்தனர். அந்த இருவருமே தமிழர். அவர்களில் ஒருவர் என் கையைப்பிடித்து தடவி நரம்பைத் தேடினார். "கையை இறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். நானும் அவ்வாரே செய்தேன். "மன்னிக்கவும் ,வலிக்கும்  எங்களுக்கு வேறு வழியில்லை" என்று சொல்லிக் கொண்டே கையில்  ஒரு பெல்ட்டால் இறுக்க கட்டினார். மீண்டும் "மன்னிக்கவும் " என்று சொல்லிக் கொண்டு ஊசியால் இரத்தத்தை எடுக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட பத்து நிமிடம் ஒரு பெரிய டியூபிலும் மூன்று சிறிய டியூபிலும் எடுத்துக் கொண்டனர். நான் அவரிடம் "எப்போது பரிசோதனை முடிவுகள் வரும் ?" என்று கேட்டேன். "இரவு ஆகிவிடும் " என்றார். இரண்டு நர்ஸ்களும் சென்ற பின் தலைமை நர்ஸ் என்னிடம் "மன்னிக்கவும் உங்களுக்கு கோவிட்-19 பரிசோதனையும் செய்ய வேண்டும்" என்றார். நான்  "சரி" என்றேன். அவர் வெளியே சென்றார்.

சற்று நேரம் கழித்து PPE அணிந்து கொண்டு அவரும் மற்றொருவரும் வந்தனர். "மன்னிக்கவும் இது மிகவும் வலிக்கும்பதினைந்து நிமிடங்கள் பிடிக்கும்" என்றார். நான் தலையை ஆட்டினேன். Swab test தான்.மூக்கின் ஒரு தூரத்தில் ஒரு நீள கம்பியை(அதன் நுனியில் துணி அல்லது பஞ்சு) செலுத்தி   அதிலிருந்து  சளியை எடுத்தார்கள். கிட்டத்தட்ட பத்து நிமிடம் திரும்ப திரும்ப மூக்கின் துவாரத்தில் அந்த கம்பியை செலுத்தி தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டார்கள் . மிகவும் வலித்தது. கண்களில் கண்ணீர் வடிந்தது.தலைமை நர்ஸ் மீண்டும் மீண்டும் "தங்களை சிரமபப் படுத்துவதற்கு மன்னிக்கவும் " என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.ஒரு வழியாக வாழ்வில்  மீண்டும் நினைக்ககூடாத அந்த பத்து நிமிடங்கள் முடிந்ததது . நான் கண்ணீரை துடைத்துக் கொண்டே "முடிவு எப்போது வரும் ?" என்று கேட்டேன். அவர் "இரவு ஆகிவிடும் கவலை வேண்டாம் " என்றார். அவர்கள் வெளியே சென்றார்கள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் டிவி ரிமோட்டைக் கையில் எடுத்தேன்.

டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது தலைமை நர்ஸ் மதிய உணவோடு வந்தார். "அனைதையும் சாப்பிடுங்கள்" என்று சொல்லிவிட்டு உணவு தட்டை மேசையில் வைத்து விட்டு சென்றார்.  ஏனோ உணவை நான்றாக சாப்பிட முடியவில்லை .சற்று நேரம் கழித்து தலைமை நர்ஸ் வந்தார். நான் அவரிடம் "நீங்கள் பிலிப்பினோவா?" என்று கேட்டேன் அதற்கு அவர் "நான் சிங்கப்பூரர் அப்பா போர்துக்கீஸ் அம்மா சீனர் " என்றார். அவரின் பெயரையும் சொன்னார்.அவர் "நான் உங்களை இதற்கு முன் பார்த்திருக்கிறேன்" என்றார் நான் "இதற்கு முன் இந்த மருத்துமனைக்கு நான் வந்ததே இல்லை " என்றேன். அவர் யோசித்துக் கொண்டே "நீங்க அந்த சர்ச்க்கு (பெயர் சொன்னார்) தான் வருவீர்கள்?" என்று கேட்டார். நான் "ஆமாம்" என்றேன். அவர் சிரித்தார். (வீட்டிற்கு வந்த பிறகு மகளிடம் இந்த நிகழ்வை சொன்னேன் அவள் "அப்பா சிங்கப்பூர்ல எந்த கூட்டத்திலும் உங்களை கண்டுபிடித்திறலாம்" என்றாள். நம்ம நிறம் அப்படி !!) . அவர் வெளியே சென்ற உடன் எனக்கு மனதில் ஒரே
பயம் கொரோனா என்று வந்தால் எப்படி சமாளிப்பது ? குழந்தைகள் இருவரையும் மனைவி ஒருவரே பார்த்துக் கொள்வது மிகவும் கடினம். மனைவிக்கும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். அப்படியே தூங்கி விட்டேன்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன்.மீண்டும் தலைமை நர்ஸ் "டீ ஸ்னாக்ஸ் நேரம்"  என்று சொல்லிக் கொண்டே ஒரு தட்டை மேசையில் வைத்தார்.நான் "நன்றி " என்றேன். "இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு saline ஏற்றுவார்கள் கவலைப் பட வேண்டாம்  அது உங்களின் அழுத்தத்தை சரியாக வைத்துக் கொள்ளத்தான் இது நார்மல் நடைமுறை தான்" என்றார். அவர் சென்ற பின் சற்று நேரம் கழித்து இருவர் வந்தனர் அதில் ஒருவர் தமிழர். கையில் ஊசியை மாட்டி saline ஏற்ற ஆரம்பித்தார்கள். தமிழர் என்னிடம் தமிழில் பேச ஆரம்பித்தார்.
"என்ன வேலை பாக்குறீங்க ?"
"ஐ டி கம்பெனில ப்ராஜெக்ட் மேனேஜரக இருக்கேன் "
"கல்யாணம் ஆயிட்ட ?"
"ம்ம் ..ஆயிட்டு ..இரண்டு குழந்தைகள் இருக்குது "
"உங்களுக்கு கொரோனா இருக்க வாய்ப்பு இல்ல .. பாப்போம் "
"நீங்க இங்க பிறந்தவரா?"
"ஆமாங்க நானும் எங்க குடும்பமும் இங்கு தான் பிறந்தோம். basically பூர்விகம் மலேசியா ,நாங்க பிறக்கிறதுக்கு முன்னேமே அப்பா இங்க வந்துட்டாரு"
"ஓ அப்படியா ... "
"நல்ல சாப்பிடுங்க .. " என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார்.
நான் பையில் கொண்டு சென்ற புத்தகத்தை எடுத்து திறந்தேன் . எமிலி டிக்கின்ஸன் எழுதிய "Alter ?" என்ற கவிதை அந்த பக்கத்தில் இருந்தது .
அந்த கவிதை :

Alter? When the hills do.
Falter? When the sun
Question if his glory
Be the perfect one.

Surfeit? When the daffodil
Doth of the dew:
Even as herself,O friend!
I will of you!

ரொம்ப நேரம் கவிதையை யோசித்துக் கொண்டே தூங்கி விட்டேன். கதவு தட்டுவது கேட்டு விழித்தேன் டாக்டரும் இதுவரை பார்க்காத நர்ஸும் வந்திருந்தனர். டாக்டர் "இரத்த பரிசோதனையில் உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருக்கிறது காலையில் மற்றொரு இரத்த பரிசோதனை செய்து விட்டு அடுத்து என்ன செய்வோம்" என்றார். நான் "சரி " என்றேன். மருந்து எதுவும் கொடுக்கவில்லை. இருவரும் வெளியே சென்றபின்  மற்றொருவர் வந்து tablet-ஐ கொடுத்து இரவு உணவை தேர்ந்தெடுக்க சொன்னார் . நான் சூப்பும் அவித்த மீனும் தேர்ந்தெடுத்தேன்.  அவர் "நல்ல சாப்பிடுங்க எல்லாம் சரி ஆயிரும்" என்றார். நான் தலையை ஆட்டினேன். அவர் வெளியே சென்ற உடன் டிவி பார்க்க ஆரம்பித்தேன்.இருபது நிமிடங்கள் கழித்து உணவு வந்தது. எதையும் மீதி வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டேன். மீண்டும் டீவி பார்த்தேன் .அப்படியே தூங்கி விட்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை தலைமை நர்ஸ் வந்து என்னை எழுப்பி "உங்களுடைய கோவிட் -19 பரிசோதனை முடிவு  வந்து விட்டது. உங்களக்கு கோவிட் -19 இல்லை மற்ற விவரம் நாளை காலை டாக்டர் உங்களிடம் எடுத்துச் சொல்வார்" என்றார்.எனக்கு பெரும் நிம்மதி. உடனே வீட்டிற்கு போன் செய்தேன் அனைவருக்கும் பெரும் நிம்மதி. நிம்மதியாய் தூங்கினேன்.

காலையில் கண் முழிக்கும் போது  காலை உணவு மேசையில் இருந்தது. நர்ஸ் வந்து ஒரு சின்ன பை கொடுத்தார். அதில் brush ,paste மற்றும் ஒரு சின்ன துண்டும் இருந்தது. நான் அதை உபயோகிக்கவில்லை.வீட்டிலிருந்து நான் எடுத்த சென்றவற்றை உபயோகித்தேன். நான் சாப்பிட்டிக் கொண்டிருக்கும் போது டாக்டர் வந்தார். அவர் "கவலை பட வேண்டாம் இரத்தம் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்" என்றார்.  நான் "கண்டிப்பாக மருத்துவமனையில் இருக்கத்தான் வேண்டுமா?" என்று கேட்டேன். அவர் "இருந்தால் நல்லது அப்படி இருக்க விருப்பம் இல்லையென்றால் நான் ஏதும் செய்ய முடியாது ஆனால் நான் உங்களுக்கு ஒரு கடிதம் தர வேண்டும் அதில் உங்களின் விருப்பப்படி தான் நீங்கள்  மருத்துமனையில் இருந்து செல்கிறீர்கள் என்று நான் குறிப்பிட வேண்டும்" என்றார். நான் "சரி " என்றேன். "அப்ப நீங்க நாளைக்கு காலையில் என் கிளினிக் வாங்க" என்றார். நான் "சரி" என்றேன்."இன்னொரு முறை இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இரத்தம் கொடுத்துவிட்டு செல்லுங்கள்" என்றார்.  நான் "சரி" என்றேன்.

சற்று நேரம் கழித்து இரத்தம் எடுக்க நர்ஸ் வந்தார்.அவர் சென்ற பின் மதிய உணவு வந்தது.சாப்பிட்டுவிட்டு  கொண்டு வந்த பொருட்களை பையில் வைத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தேன். வெளியில் அனைத்து டாக்குமெண்ட்சும் ரெடியாக இருந்தது. நான் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டேன்.அவர்கள் என்னை  பணம் காட்டும் இடத்திற்கு போகச் சொன்னார்கள். நான் அங்கு சென்றேன். அங்கிருந்தவர் என்னுடைய விவரங்களை பெற்றுக் கொண்டு "சற்று நேரம் பொறுங்கள் மீதி இருக்கும் பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கே மாற்றி விடுகிறோம்" என்றார், ஐந்து நிமிடங்கள் கழித்து என்னை அழைத்தார். " நீங்க கொஞ்ச நேரம்  கழித்து உங்கள் வாங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்று பாருங்கள்" என்றார். நான் "சரி " என்று சொல்லிவிட்டு அவர் கொடுத்த form-ல் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டேன்.

மொத்தம் முப்பது மணி நேரம் தான் மருத்துவமனையில் இருந்திருப்பேன் ஆனால் எனக்கு அது பெரிய யுகம் போல தோன்றியது. கோவிட்-19 மருத்துவமனையையே அவசர நிலையில் மாற்றி விட்டது. எல்லாமே ஒரு சீராக நடந்தது. மருத்துவர்களும் தாதியரும் கோபப் படமால் கேட்ட கேள்விகளுக்கும் எந்த ஒரு எமோஷன் இல்லமால் தெளிவாக பதில் அளித்தனர் . மருத்துவமனையை விட்டு வெளிய வந்தவுடன் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஐந்து நிமிடங்கள் வெய்யிலில் நின்றேன்.டாக்ஸி பிடித்து வீட்டிற்கு சென்றேன். டாக்ஸி டிரைவர் "என்ன ஆச்சு?" என்று கேட்டார். நான் "டெங்கு" என்றேன். "நல்ல சாப்பிடுங்க ,எல்லாம் சரியாயிடும்" என்றார். "நன்றி " என்றேன். ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைந்தேன்.சொர்கமே என்றாலும் அது நம்ம வீடு மாதிரி வருமா!!!

No comments: