Monday, June 10, 2019

The Great Firewall Of China - James Griffiths


சீனாவின் இணைய கட்டுப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததுதான் ஆனால் எவ்வாறு சீன கம்யூனிச அரசு அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறது என்பது ஒரு புரியாத புதிர்.இந்த புத்தகம் அதற்கு பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது. இணையம் பரவலாக உபயோகத்தில் வந்தவுடன் பலரும் எதிர்பார்த்தது செய்திகளும் மக்கள் தொடர்பும் அனைவருக்கும் எளிதாகவும் தடையில்லாமலும் கிடைக்குமென்று. அது ஓரளவு நடந்ததென்றாலும் பல நாடுகள் இணையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தன ஆனால் யாரும் சீனாவைப்போல் வெற்றிபெறவில்லை.

சீன இணைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்க நிறுவனங்கள்தான். அவைதான் இணைப்புக்கு தேவையான அனைத்து hardwares மற்றும் சாப்ட்வேர்களை கொடுத்தார்கள்.  சீன அரசு  விரைவிலையே இணையத்தின் சக்தியைப் புரிந்து கொண்டனர். இதில் என்ன கொடுமையென்றால் அந்த சாப்ட்வேர் மற்றும் hardware - லேய in-build சென்சார் இருந்தன . படிப்படியாக கட்டுப்பாடுகளை விதித்தனர். இணைய கட்டுபாட்டிற்கென்றே அரசில் தனி பிரிவுகள் தொடங்கப்பட்டன. இணையம் பெரிதாக அரசும் அதைப் பெரிதாக கட்டுப்படுத்தியது.

சீனாவில் Facebook ,கூகிள் மற்றும் ட்விட்டர் இல்லை .அதற்கு பதிலாக அவர்களால் அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட Baidu , WeChat மற்றும் Alibaba உள்ளன.  இந்நிறுவனங்கள்  மக்களின் அனைத்து இணைய செயல்பாடுகளையும் சீன அரசோடு பகிர்ந்து கொள்கின்றன.  சீன அரசு தனது விதிமுறைகளை ஏற்காத வெளிநாட்டு  நிறுவனங்களை அங்கே இயங்க அனுமதிக்கவில்லை. கூகிளின் கதை அதற்கு நல்ல எடுத்துக்காட்டு .சீன அரசையோ அல்லது சீனர்களைப் பற்றியோ ஏதாவது தவறாகவோ அல்லது மாற்றுக் கருத்தோ வெளியிட்டால் உடனே சீன அரச தீவிர நடவடிக்கை எடுக்கிறது. சீனாவிற்குள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சீன அரசு மாற்று கருத்து கொண்டவர்களை இணையம் மூலம் தண்டிக்கிறது. இதை பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார் ஜேம்ஸ் .

சீனாவின் இந்த இணைய கட்டுப்பாட்டுத் திட்டம் மற்ற சர்வாதிகார அரசுக்கு பெரும் வரப்பிரசாதம். உகாண்டா ரஷ்யா போன்ற நாடுகள் சீனாவிடம் இருந்து இந்த டெக்னாலஜியை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. மற்ற நாடுகளில் மக்கள் இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை மிகவும் தீவிரமாக எதிர்த்தனர் ஆனால் பெரும்பான்மையான சீனர்கள் அப்படி எதிர்க்கவில்லை. அது ஒரு புரியாத புதிர். ஒரு சில நாட்கள் facebookயும் கூகிளையும் தடை செய்தாலே நாம் வெகுண்டு எழுகிறோம்.
டெக்னாலஜி எப்படியெல்லாம் நமது அனைத்து செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு பெறுகிறது  அதை எவ்வாறு அரசாங்கங்கள் கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த புத்தகத்தை விட தெளிவாக சொல்லிவிட முடியாது .

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் .

No comments: