Showing posts with label Travels. Show all posts
Showing posts with label Travels. Show all posts

Tuesday, February 4, 2020

புக்கேத் பயணம் -1

நாள் 1:
நாங்கள் தாய்லாந்து செல்வது இது மூன்றாவது முறை. இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. ஆனால் ஏர்போர்ட்டில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து எவ்வளவு தாய்லாந்து பணம் கொண்டுவந்துள்ளோம் என்பதை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.  நாங்கள் படிவத்தை ஆன்லைனில் டவுன்லோட் செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்து அதை சிங்கப்பூரிலேயே பூர்த்தி செய்து எடுத்துச் சென்றோம் ஏனென்றால் கடந்தமுறை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் படிவத்தை பூர்த்தி செய்ய செலவானது. அதிகாரி ப்ரிண்ட் அவுட்டை பார்த்தவுடன் சிரித்துக்கொண்டு "very good" என்றார். அடுத்த பத்து நிமிடத்தில் நாங்கள் ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்துவிட்டோம்.

ஒரு ஜப்பானிய தொலைகாட்சி தொடரில் ஒருவர் கூறுவார் "ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அதன் உணவு பட்டியலில்(மெனு கார்டு) இருந்து தெரிந்து கொள்ளலாம் " என்று . எனக்கு அது பொருந்தும்.நான் எங்கு சென்றாலும் அங்குள்ள உணவின் சுவையை அறிவதில் தான் அதிகம் நேரம் செலவழிப்பேன். உணவின் மூலமே அந்த நாட்டைப் பற்றி அறிய முற்படுவேன்.இந்தமுறையும் அதே நோக்கம்தான். ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தவுடன் அருகில் இருந்த 7eleven-ல் "oishi chicken sandwich" வாங்கினேன். மகள் சாக்லேட் பிஸ்கட் வாங்கினாள். "oishi chicken sandwich" மிகவும் சுவையாக இருந்தது. இது தாய்லாந்து உணவு கிடையாது.இது ஜப்பானிய முறையில் செய்தது. நான் இந்த sandwich-ஐ பலமுறை உண்டிருக்கிறேன். ஆரம்பமே சுவையாக ஆரம்பித்ததில் பெரும் மகிழ்ச்சி.

ஹோட்டலில் இருந்து எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேன் வந்தவுடன் அதில் ஏறி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஹோட்டலை அடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்  புக்கேத்தின் தெற்கு எல்லையில் இருக்கும்  ரவாய் கடற்கரை அருகில் இருக்கிறது. ஹோட்டலின் பெயர் "#roost glamping". அறை காலியாக இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கிறது என்று சொன்னவுடன் வரவேற்பு அறையிலேயே இருந்தோம். நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல்  ஒரு அழகான குன்றிமேல் இருந்துது. அறை ரெடியாவதற்குள் சாப்பிடலாம் என்று எண்ணி மெனு கார்டை பார்த்தல் ஒரு சில தாய்லாந்து உணவுகளைத் தவிர அனைத்தும் மேற்கத்திய உணவு வகைகள். சிறு ஏமாற்றம் இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி சில உணவு வகைகளை ஆர்டர் செய்தோம். சாப்பிட்டதில் மிகவும் பிடித்தது "பாட் தாய் (pad thai)" தான்.
பாட் தாய் (pad thai)

பார்க்கத்தான் காரமாக தெரிந்தது ஆனால் அவ்வளவு காரம் இல்லை. நூடுல்ஸ் சற்று சவுக் சவுக் என்றிருந்தது. ஆனால் அனைத்தையும் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருந்தது. இந்த பாட் தாய் (pad thai) தாய்லாந்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும். தெரு ஓரங்களில் வண்டிகளில் விற்றுக் கொண்டிருப்பார்கள். இது தாய்லாந்தின் தேசிய உணவு வகைளில் ஒன்று. இதற்கு பல வரலாறு உள்ளது. நான் கேள்விப்பட்டது வரை இதன் base ஆகிய நூடுல்ஸ் சீனாவில் இருந்து வந்ததென்றும் உலகப்போரின் போது உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது  கிடைத்தவற்றை ஒன்று சேர்த்து செய்ததுதான் இந்த பாட் தாய் (pad thai).  சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அனைத்து food court-லும் கிடைக்கும்.



அறை தயாரானதும் அங்கு சென்றோம் எங்கள் அறை குன்றின் கீழ் இருந்தது. உண்மையில் அது அறை இல்லை அது ஒரு கூடாரம். மிகவும் அழகாக இருந்தது . என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.ஏசி இல்லை ஒரேயொரு பேன் மட்டும்தான் இருந்தது.  ஏசி கூடாரத்திற்கு  மூன்று மடங்கு கட்டணம் அதிகம். எங்களுக்கு அது தேவையில்லை என்று தோன்றியது.

மாலை வரை ஓய்வு நாங்கள் தூங்கினோம். என்ன செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது ஹோட்டலின் வரவேற்ப்பாளர் நடக்கும் தூரத்தில்தான் ரவாய் கடற்கரை என்றார்.  நாங்கள் கடற்கரையை அடையும்போது தண்ணீர் உள்ளே சென்றிருந்தது (low  tide).  அழகான கடற்கரை அரை மணி நேரம் கடற்கரையில் நடந்தோம். இதமான காற்று மற்றும் வெள்ளை மணல் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இருட்ட ஆரம்பித்தது சாப்பிட்டுவிட்டு கூடாரத்திற்கு செல்வதாக முடிவு செய்து உணவகத்தைத் தேடினோம். கடல் உணவு விடுதியை தேர்வு செய்து அங்கு சென்றோம். எனக்கு அங்கு சாப்பிட்டதில் பிடித்தது oyster தான். oyster-னா தமிழ என்னன்னு தெரியல.
ஆலிவ் எண்ணெயில் பூண்டும் சோயா சாசும் கலந்து சுடப்பட்டது. அற்புதமான சுவை . மிகவும் மெதுவாக ரசித்து சாப்பிட்டேன். பணியாளரிடம் இது எங்கிருந்து வந்தது என்று கேட்டேன் அவர் அருகில் இருக்கும் தீவிலிருந்து என்றார். நான் சிங்கப்பூரில் இந்த அளவிற்கு சுவையாக oyster சாப்பிட்டதில்லை. ஹிரோஷிமாவில் சாப்பிட oyster தான் நான் இதுவரை சாப்பிட்டதிலேயே சிறந்தது.


சாப்பிட்டு முடித்துவிட்டு கார் பிடித்து கூடாரத்திற்கு வந்து சேர்ந்தோம். இரவில் ஹோட்டல் இன்னம் அழகாக இருந்தது .


இரவு நல்ல குளிர். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினோம்.