Thursday, April 26, 2018

Beauty Is A Wound - Eka Kurniawan


வெகுநாட்களாக வாசிக்க வேண்டுமென்று நினைத்த புத்தகம். நூலகத்தில் பார்த்தவுடன் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். முதல் வரியை வசித்தவுடன் நான் சொன்னது  "wow". உடனே அருகிலிருந்த என் மகள் என்னப்பா என்னாச்சு ? என்று கேட்டால் . அதற்கு நான் " One afternoon on a weekend in March, Dewi Ayu rose from her grave after being dead for twenty-one years" என்ற முதல் வரியை வாசித்தேன் . அதற்கு அவள் " பேய் கதையாப்பா ?" என்று கேட்டால் நானோ படித்து முடித்த பிறகு சொல்கிறேன் என்று சொல்லி விடாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வசித்து ஒரு வாரத்தில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன் .
Every human is a mammal, just like a dog, and walks on two legs like a chicken.
 இந்த கதை எந்த genre  என்று கேட்டால் எந்த வகையையும் சார்ந்தது அல்ல என்றுதான் சொல்ல வேண்டும் . அனைத்தும் கலந்தது. கேப்ரியல் மார்க்கெஸ் எழுதிய " நூற்றாண்டு கால தனிமை " போல ஒரு குடும்பத்தின் வரலாறை சமகால நிகழ்வுகளோடு சொல்கிறது . மற்றொரு பக்கம் இந்தோனேசியாவின் வரலாறை சொல்லும் கதை என்றும் சொல்லலாம்.  தேவி அயு இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுகிறாள் .இது அவளின் கதை.
If I might share my opinion, this world is hell, and our task is to create our own heaven.
தேவி அயு டச் மற்றும் இந்தோனேசிய வம்சவழியில் பிறந்தவள். உலகப் போரின்போது ஹாலந்திற்கு செல்ல வாய்ப்பு அமைந்தும் செல்லாமல் இந்தோனேசியாவிலேயே இருக்கிறாள். அவள் வசித்த ஊரிலேயே அழகானவள் என்று பெயர்பெற்றாள்.சந்தர்ப்பச் சூழ்நிலையால் விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகிறாள். முதலில் பிடிக்காவிட்டாலும் பிறகு அதுதான் வாழ்க்கை என்றதும் தனக்கென்று ஒரு வழியை அமைத்துக்கொண்டு அதன்படி வாழ்கிறாள் .  அந்த ஊரில் அவளோடு உறவு கொள்ள ஆண்கள் ஏதும் செய்ய தயாராக இருந்தார்கள். அதனாலேயே அவள் மற்ற பெண்களால் வெறுக்கப்பட்டாள்.  ஒவ்வொன்றாக மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. மூன்றுக்கும் வெவ்வேறு தகப்பன்கள்.  மூன்றும் பெரும் அழகிகளாக வளர்ந்தன. 
Communism was born from a beautiful dream, the likes of which there will never be again on the face of this earth: that there would no longer be lazy men who eat their fill while others work hard and starve.
ஒருத்தியின் கணவன் ஊர் முரடன் (preman) ,இன்னொருத்தன் இராணுவ வீரன் மற்றும் முன்னாள் கொரில்லா படை தளபதி மற்றொருத்தன் கம்யூனிஸ்ட்.  அன்பு மற்றும் பழிவாங்குதல் தான் இந்த கதையின் பிரதானம். தேவி அயுவின் தாய் அன்பு. அவள் தனது மகள்கள் அனைவரையும்  மிகவும் அன்பு செய்கிறாள். மகள்களின் கணவர்களோ ஒருவரை ஒருவர் பழிவாங்குவதில் கவனமாக இருக்கிறார்கள். உண்மையில் பழிவாங்குதல்தான் கதையை  நகர்த்திச்செல்கிறது.  ஒரே ஒரு வருத்தம்  கதையில் வரும் அனைத்து பெண்களையும் ஏதோ  ஒரு  உடல் சம்பந்தமான பொருளாக ஆசிரியர் சித்தரிப்பதுதான்.

இந்தக் கதை பல வன்முறைச் சம்பவங்களை கொண்டுள்ளது. பல கொடூர கற்பழிப்புகள் படுகொலைகள் சர்வசாதாரணமாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விபச்சார விடுதியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் கம்யூனிச படுகொலைகள் . ஒன்று ஜப்பானியர்களால் மற்றொன்று புதிய சுதந்திர அரசால் . மற்றொரு பார்வையில் இந்த பெண்களின் வாழ்க்கைதான் இந்தோனேசியாவிற்கும் நடந்தது என்று எடுத்துக்கொள்ளலாம் .
You don't need to belong to one another in order to love one another.
மிகவும் எளிய பல இடங்களில் "காமிக் " மாதிரி மொழி நடை. அற்புதமான மொழிபெயர்ப்பு . கதையில் பல இடங்களில் மஹாபாரத மற்றும் இராமாயண கதாப்பாத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.  பல சம்பவங்களை சாதாரண மொழியில் கூறிச் செல்வது இக்கதைக்கு பெரும் பலம். மற்றொரு முக்கியமான அம்சம் நகைச்சுவை. வாசர்கள் கண்டிப்பாக வெடித்துச் சிரிக்கலாம். நான் பல இடங்களில் சிரித்தேன். அது தான் மேஜிக்கல் ரியலிசம் - கதையில் ஏதும் நடக்கலாம் .

என் மகள் கேட்ட கேள்விக்கு பதில் "இது ஒரு பேயின் கதை அல்ல . பல பேய்களின் கதை".   கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கிளாசிக் .

Tuesday, April 24, 2018

The Sweet Orange Tree - Jose Mauro de Vasconcelos


பிரேசிலில் மிகவும் பிரபலமான புத்தகம் இது .என் மகளோடு நூலகத்திற்கு சென்ற பொழுது அங்கு  குழந்தைகள் பகுதியில் இந்த புத்தகத்தைப் பார்த்தேன் .  இதற்கு முன் இந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லை.  உள்ளே "இது வலியை கண்டுபிடித்த  ஒரு சிறுவனின் கதை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது . அது என் ஆவலை மேலும் கூட்டியது . உடனே எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் .

இது  ஐந்து வயது சிறுவன் ஸிஸியின் (Zeze) கதை. அப்பா வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். அம்மா ஒருவரின் சம்பாத்தியத்தில் மட்டுமே குடும்பம் நடந்துகொண்டிருக்கிறது . சோகமான ஏழை குடும்ப கதையில்லாமல்  சிறுவனின் அழகான கதையை சொன்னதற்காகவே ஆசிரியரை பாராட்டவேண்டும் . ஸிஸிதான் அனைவருக்கும் பிடித்தமானவன் அவனே அனைவராலும் வெறுக்கப்படுபவனும் கூட .

ஸிஸி செய்யும் குறும்புகள் அலாதியானது.அவன்  தம்பிக்கு  அவன் உருவாக்கும் விலங்கியல் பூங்கா , அண்டை வீட்டார் மற்றும் பாதிரியாரோடு அவன் செய்யும் குறும்புகள் பக்கங்களை கடகடவென திருப்பப்  செய்கிறது . சில இடங்களில் அவன் சிறுவன் என்பதையே நம்ப முடியவில்லை . அவன் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று திடமாக நம்புகிறான் . கிறிஸ்துமஸ் அன்று அவனுள் குழந்தை இயேசு பிறக்கவில்லையென்றும் சாத்தான் பிறக்கிறான் என்றும் நம்புகிறான் .

ஆசிரியர் பல சமுக பிரச்சனைகளை அவன் மூலம் கடந்து செல்கிறார். குறிப்பாக இன மற்றும் வர்க வேறுபாடுகளை சின்ன சின்ன விசயங்களில் மிக மெல்லிதாக சிறுவனுக்கே உரிய முறையில் தொட்டுச் செல்கிறார். ஸிஸி அனைத்தையும் வெளிப்படையாக பேசுபவன். அதை மற்றவர்களால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை . அதனால் எப்போதும் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு ஆறுதல் தரும் விஷயங்களில் முக்கியமானவை  ஆரஞ்சு மரமும் அவனை அவனாகவே ஏற்றுக்கொண்ட பாட்டுப் புத்தகம் விற்கும் சிறுவனும் மற்றும் கார் வைத்திருக்கும் பெரியவர்.

யாரும் விரும்பாத ஆரஞ்சு மரத்தை அவன் தனது நண்பனாக ஏற்றுக்கொள்கிறான் . தனது இன்பத்தையும் துன்பத்தையும் அதோடு பகிர்ந்து கொள்கிறான். பாட்டு புத்தகம் விற்கும் சிறுவனுடன் உள்ள உறவு கள்ளமில்லாத பால்யத்திற்கே உரிய உறவு . கார் வைத்திருக்கும் பெரியவருடனான உறவு மகன் தந்தை உறவு போல. தன்னை தானாகவே நேசித்தால் அவரை அவனுக்கு மிகவும் பபிடித்தது .

இது ஆசிரியரின் சொந்த கதை என்று சொல்லப்படுகிறது .பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற புத்தகம் . திரைப்படமாகவும் வந்துள்ளது .அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் .

Saturday, April 7, 2018

The Reader On The 6.27 - Jean-Paul Didierlaurent


Guylain Vignolles -இவன்தான் இந்த கதையின் நாயகன் . தினம்தோறும் சரியாக 6:27 வண்டியில் அவனுக்கென்று அமைந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டு தன் பையிலிருந்து ஒரு தாளை எடுத்து வாசிப்பான் . அவன் வாசிக்கும் போது யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஒருநாள் வாசித்ததற்கும் அடுத்தநாள் வாசித்ததற்கும் சம்பந்தமே இருக்காது. பல வருடங்களாக அவன் அதை செய்து வருகிறான் .அச்செயலை அவன் வாழ்வின் ஒரு பகுதியாகவே பார்க்கிறான்.ஆனால் அவன் செய்யும் வேலையோ புத்தகங்களை கூழாக மாற்றும் இயந்திரத்தை இயக்குவது. அவனுக்கு அந்த வேலையில் சிறிதும் மனமில்லை இருந்தாலும் சூழ்நிலை காரணமாக அதை செய்தாகவேண்டும். அவன் அந்த இயந்திரத்தை 'பொருள்' (The Thing)   என்றுதான் அழைக்கிறான். அதைப் பற்றி பேசும்போதெல்லாம்  அவனுள் ஒரு அருவருப்பு   உண்டாகுகிறது. இயந்திரத்தில் இருந்து தப்பிய தாள்களை பத்திரமாக யாருக்கும் தெரியாமல் சேகரித்து வீட்டுக்கு கொண்டு செல்வான். அதைத்தான் தினமும் ரயிலில் வாசிப்பான் .

அவனது வீட்டில் அவனைத் தவிர ஒரு தங்கமீன் மட்டுமே உள்ளது. அவன் அம்மாவிடம் தனது வேலையைப் பற்றி பொய்ச்சொல்லி காலத்தை கடத்திக்கொண்டிருக்கிறான். அவனது வாழ்க்கை ஒரே பாதையில் பயணித்துவந்தது ஆனால் அனைத்தும் ஒரு  USB drive மூலம் மாறியது .  அதில் ஒரு இளம் பெண்ணின் டைரிகுறிப்புகள் 72 பாகங்களாக  இருந்தது . Guylain Vignolles அதை ஒரே இரவில் படித்து முடிக்கிறான் . அந்த பெண்ணின் மீது காதல் கொள்கிறான் .அவளைத் தேடுகிறான் . அவளை கண்டடைந்தானா இல்லையா என்பதே முடிவு .

அந்த பெண்ணின் பெயர் ஜூலி .அவள் கழிப்பறை சுத்தம் செய்பவள். தனது prince charming -காக காத்துக்கொண்டிருப்பவள். அவள் தனது வேலையை பற்றி விவரிப்பது மிகவும் அழகு. அவளது ஆண்டி (aunty) கூறும் அறிவுரைகளாக அவள் சொல்லும் வாக்கியங்கள் கதைக்கு மிகவும் பொருத்தம் . அவளுக்கு எந்த மாதிரி ஆண் தேவை என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள் . இந்த கதையில் வரும் மற்ற பெண்கள் அனைவருமே வயதானவர்கள் . அவர்களும் ஒரு சராசரியான வாழ்க்கை வாழ்பவர்கள் .

ஒரு  பக்கம் இந்த புத்தகம் சாதாரண மக்களின் வாழ்க்கையை மிக சிறப்பாக பிரதிபலிக்கிறது .  மற்றொரு பக்கம் இந்த மாதிரி வாழ்க்கையை நம்ப  முடியாத அளவிற்கு ஆசிரியர் கூறுகிறாரா  என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது ஏனென்றால் கால்களை இழந்தவன் அது மீண்டும் வளரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான் மற்றொருவனோ "orator" -ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறான் இப்படி இன்னும் சில கதாப்பாத்திரங்கள் .  இந்த புத்தகத்தின் பெரிய பலம் எழுத்தின் பலத்தை மிகவும் அழகாக எடுத்துரைப்பது . புத்தகங்கள் எவ்வாறு ஒருவனின் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு இக்கதை ஒரு எடுத்துக்காட்டு .

இந்த புத்தகம் ஆசிரியருக்கு முதல் புத்தகம் . மிகவும் தெளிவான எழுத்துநடை எந்த சிரமமும் இல்லாமல் படிக்கலாம் . ஒரு "feel good " புத்தகத்தைப் படித்த உணர்வு .