Monday, July 10, 2017

நானும் ஹரி போட்டரும்


ஹரி போட்டர் புத்தக வரிசையில் முதல் புத்தகம் வந்து இந்த ஜுனுடன் இருபது வருடங்கள் ஆகிவிட்டது . ஆனால் நான் படிக்க ஆரம்பித்தது பத்து வருடங்களுக்கு முன்னால்தான். நான் இந்த புத்தகங்களை வாசிக்க முதல் காரணம் சிங்கப்பூரில் எங்கு பார்த்தாலும் பதின் வயது இளைஞர்களிடம் இருந்த இந்த வரிசையின் இறுதி புத்தகமான "Harry Potter and the Deathly Hallows" தான் .வெகுநாட்களாக படிக்க வேண்டுமென்று நினைத்ததை இந்த இளைஞர்களின் ஆர்வம் மேலும் தூண்டியது.

முதல் புத்தகமான "Harry Potter and the Philosopher's Stone" ஒரு பிரம்மாண்ட மேஜிக் உலகத்திற்கான விதையை விதைத்ததென்றால் மிகையாகாது . என்னுள் அது ஒரு காத்திருப்பையும் எதிர்பார்ப்பையையும் உருவாக்கியது. கதாபாத்திரங்களின் அறிமுகம் மிகவும் நுட்பமானது . துர்சலேவின் வீட்டின் அமைப்பும் அவரின் மனைவி மகனின் சித்தரிப்பு மற்றும் ஹரியின் தங்கும் இடமும் அவரின் எதிர்கால போராட்டத்தின் குறியே .  உண்மையில் முதல் மூன்று புத்தகங்களில்  கதாபாத்திரங்களை மெல்ல மெல்ல ஒரு பெரிய போருக்கு தயார் செய்வதுபோல் உள்ளது. நான்காவது புத்தகமான "Harry Potter and the Goblet of Fire"-ல் வோல்டேர்மட் மனித உருவம் எடுக்கிறான் .அடுத்த மூன்று புத்தகங்கள் ஹரியின் வோல்டேர்மாட்டுடன் போராட்டமே .

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை .சில நாட்கள் ஆந்தை கடிதம் கொண்டுவராதா  என்று ஏங்கியது உண்டு. வாசகர்களை ஒரு விதமான மனநிலைக்கு ஆசிரியர் கொண்டு செல்கிறார் -அதுவே ஆசிரியரின் வெற்றியும் கூட. ஆசிரியர் பல மொழிகளிலிருந்து பல வார்த்தைகளை எடுத்து ஆங்கிலத்தோடு இணைத்து உபயோகித்துள்ளார் .சில புதிய வார்த்தைகளையும்(Muggle, Quidditch) உருவாக்கியுள்ளார் . எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் ஹக்ரீட்(Hagrid) ,டம்பெல்டோர் (Dumbledore) மற்றும் ஹெர்மியோன் (Hermione Granger). அதிலும் ஹக்ரிடின் அறிமுகம் மறக்கமுடியாதது.

இந்த வரிசை புத்தங்களை இரண்டாவது முறையாக படிக்கும்போதுதான் அதிலுள்ள சில patterns அறிய முடிந்தது. முதலாவது அன்பின் வெற்றி - தன் மகனுக்காக தாயின் அன்பு .திரும்ப திரும்ப இது வெளிப்படுத்திக்கொன்டே இருக்கிறது. உண்மையில்  ஹரியின் நண்பர்களும் அவனுக்காக பலவற்றை இழக்கின்றனர் ஆனால் அவர்களின் அன்பு மாறவே இல்லை .ஹரியும் அனைவரையும் நேசிக்கிறான் .இரண்டாவது ஹரி மற்றும் டம்பெல்டோரின் உறவு. இந்த உறவை தந்தை மகன் அல்லது குரு சிஷ்யன் என்று எப்படிப் பார்த்தாலும் ஒரு தூய்மையான உறவு வெளிப்படுகிறது .,டம்பெல்டோர் தான் ஹரியின் தூண் , எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் அவர்தான் ஹரியை மீட்கிறார்.அவர் ஒரு கடவுள் மாதிரி காட்சியளிக்கிறார் .

மூன்றாவது மனிதன் இறப்போடு போடும் போராட்டம் .ஹரி தொடர்ச்சியாக சாவின் உச்சத்திற்கே சென்று மீள்கிறான் .தொடர் முழுவதும் அவனை சுற்றி சாவு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது அவனும் பயந்து கொண்டே அனைத்தையும் எதிர் கொள்கிறான் .என்னதான் முடிவை யூகிக்க முடிந்தாலும் இறுதிவரை thrilling-காகவே  கதையை நகர்த்திச்சென்றது ஆசிரியரின் பெரிய வெற்றியே .நான்காவது ஹரி மற்றும் வோல்டேர்மாட்டின் உறவு .எதெல்லாம் நல்லவையோ அது ஹரி எதெல்லாம் தீயவையோ அது வோல்டேர்மாட்.  இருவரின் உயிரும் ஒன்றோடொன்று இணைத்துள்ளது . வோல்டேர்மாட்டை அழிக்க ஹரி சாக வேண்டும் . வோல்டேர்மாட்டை விட ஹரியே அதிக action-ல் ஈடுபடுகிறான் .அதுவும் சரியே .ஒரு பயங்கர தீய சக்தியை அழிக்க ஹரி தனது அணைத்து திறனையும் பயன்படுத்தியே வேண்டும், அதைத்தான் அவன் செய்கிறான் .

இந்த வரிசை புத்தகங்கள்  வாசகர்களுக்கு ஒரு விதமான சுதந்திரத்தை கொடுத்தது .பல விதமான கிளைக் கதைகள் வாசகர்களால் எழுதப்பட்டது .ஹரி போட்டர் 'தீம் பார்ட்டிகளும் புத்தக விமர்சனங்களும் ஆய்வுகளும் நடந்து கொண்டேயிருக்கிறது .Young adult fiction-வகையை  ஹரி போட்டர் புத்தகங்கள் உயிர்ப்பித்தது என்றால் மிகையாகாது . ஒரு நாள் சர்ச்சில் ஹரி போட்டர்  படித்துக்கொண்டிருந்தேன் அப்போது வயசான ஒருவர் இந்த வரிசை புத்தகங்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்றார் .எனக்கு அப்படி படவில்லை. ஆம் கிறிஸ்தவம் மேஜிக் மற்றும் மாந்த்ரீகம் போன்றவற்றை எதிர்க்கிறது .ஆனால் இந்த வரிசை புத்தங்களில்  அந்த மாதிரி இல்லை . சாத்தான்  வழிபாடும் இல்லை .என்னை பொறுத்தவரை இது ஒரு fairy tale வகையை சார்ந்தது.

கடந்த மூன்று மாதங்களாக நான் என் மகளுக்கு முதல் புத்தகமான "Harry Potter and the Philosopher's Stone-ஐ வாசித்துக்கொண்டிருக்கிறேன்.அவளுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது .இரண்டு வார இடைவெளிக்கு பிறகு இன்று அவளிடம் ஹரி போட்டர் ஞாபகம் இருக்கிறதா ? என்று கேட்டேன் .அவள் உடனே "I want Gringotts - that money is funny" என்றாள் .  கதை புரிகிறதோ இல்லையோ அதில் வரும் பெயர்களும் பொருட்களும் அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. மீள்வாசிப்பு எனக்கு இன்னொரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தக வரிசை.

No comments: