Friday, May 12, 2017

சீயின் கனவு (Xi's Dream) - One Road One Belt

சீ சின்பிங் (Photo Credit : Wikipedia) 

செப்டம்பர் 7, 2013 அன்று சீன  அதிபர் சீ (Xi) ஒரு உரையில் எவ்வாறு பழைய பட்டு  பாதை சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் வர்த்தகம் மற்றும் கலாச்சார தொடர்ப்பை  ஏற்படுத்தியது மற்றும் அதன் இன்றைய தேவையை மிக தெளிவாக எடுத்து உரைத்தார் . புது பட்டு  பாதையே சீ(Xi) ஆட்சியின் கனவாய் மாறியது . இது ஒரு பெரிய சிக்கலான கனவு .சீ(Xi) எங்கு சென்றாலும் இந்த புதிய பாதையை பற்றி பேசினார் . பேசினது மட்டும் அல்லாமல் செயலிலும் இறங்கினார் . எதிர்பார்த்தது போலவே அமெரிக்கா இப்புதிய பாதைத் திட்டத்தில் பங்குபெற மாட்டோம் என்று அறிவித்தது மட்டுமல்லாமல் அதன் நட்பு நாடுகளையும் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவித்தது .

இப்புதிய பாதையானது  இரண்டு முக்கிய திட்டங்களைக் கொண்டது . முதலாவது பட்டு  பாதை பொருளாதார பகுதி (Silk Road Economic Belt) - இது சீனாவையும் மத்திய ஆசியாவையும் இணைப்பது .இரண்டாவது கடல் சார்ந்த பட்டு  பாதை(Maritime Silk Road) -இது சீனாவின் தெற்கு பகுதியை இணைப்பது . இத்திட்டத்தில் இந்தியா மிக கவனமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது . சீனாவும் பாகிஸ்தானும் பொருளாதார கூட்டு உடன்படிக்கை (China Pakistan Economic Corridor) செய்து கொண்டதுதான் அதற்கு முக்கிய கரணம். மற்றொரு காரணம் சீனா இந்தியாவின் "Nuclear Supplier Group" உறுப்பினராவதற்கு ஒப்புக்கொள்ளாதது .
Photo Credit - CGTN America

"Pivot To Asia" -இதுதான் அமெரிக்காவின் ஆசிய வெளியுறவு கொள்கை .ஆனால் அது ஒபாமாவின் தோல்வியே .இந்த தருணத்தில்தான் சீனா தனது முழு அதிகாரத்தையும் (ராணுவ  மற்றும் பொருளாதார) பயன்படுத்தி தனது வலிமையை வெளிப்படுத்தியது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் இரு பெரும் அதிகாரத்திற்கிடையே சிக்கிக் கொண்டது .  இந்நேரத்தில் டிரம்ப் "Trans Pacific Patnership(TPP)" என்னும் கூட்டு பொருளாதார உடன்படிக்கையை ரத்து செய்தார். இது மேலும் ASEAN நாடுகளை சீனாவின் பாகம் திசை திருப்பியது .  பல  நாடுகள்  ஒவ்வொன்றாக தங்களை அமெரிக்காவின் எதிர்ப்பை  மீறி இத்திட்டத்தில் தங்களை  சேர்த்துக் கொண்டார்கள்  .  இது சீனாவிற்கு கிடைத்த பெரிய வெற்றி .

இந்தியா  உட்பட இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் தங்களின் பங்கேற்பை உறுதி செய்துள்ளன . விரைவில் இந்த எண்ணிக்கை மேலும் கூடுமே தவிர குறையாது.இத்திட்டம் ஐந்து  வழிகளை (Five Routes)கொண்டது :
  1. சீனாவை மத்திய ஆசியா மற்றும் ரஷ்யா மூலம் ஐரோப்பாவோடு  இணைக்கும் வழி  .
  2. சீனாவை மத்திய ஆசியா மூலம் மத்திய கிழக்கு நாடுகளுடன்  இணைக்கும் வழி .
  3. சீனா ,தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவை இந்திய பெருங்கடலுடன்  இணைக்கும் கடல் வழி .
  4. சீனாவை தென்கிழக்கு சீனக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் மூலம் ஐரோப்பாவோடு இணைக்கும் கடல் வழி.
  5. சீனாவை தென்கிழக்கு சீனக்கடல் மூலம் தெற்கு பசிபிக் நாடுகளுடன் இணைக்கும் கடல் வழி.

மேலே உள்ள ஐந்து  வழிகளை செயல்படுத்த சீனா ஆறு பொருளாதார பாதைகளை (Economic Corridors)வெவ்வேறு நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது  அவைகளில் இந்தியாவிற்கு ஒத்து வராதது சீனா -பாகிஸ்தான் பொருளாதார பாதை  (China- Pakistan Economic Corridor). சீனா இதன் மூலம் பாகிஸ்தானிற்கு பெரிய உதவிகளை செய்து கொண்டு வருகிறது . சீனா பாகிஸ்தானில்  ரயில் பாதைகளையும் ,சாலைகளையும் வெகு விரைவாக கட்டிக்கொண்டு வருகிறது .

இவ்வளவு பெரிய திட்டத்திற்கு பணம் எங்கிருந்து வரும்? இந்த கேள்விக்கு சீனாவின்  பதில்தான் "ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி "(Asian Infrastructure and Investment Bank). இது ஆசிய வளர்ச்சி வங்கிற்கு (Asian Development Bank) நேரடி எதிரி மாதிரி . சீனா ஆசியாவின் உள்கட்டமைப்பு தேவைகளை நன்கு அறியும் .ஆசிய வளர்ச்சி வங்கியின் கண்டிப்பான அணுகுமுறையும் பண நெருக்கடியும்  பல நாடுகளை ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி நோக்கி செலுத்தியது . அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இங்கிலாந்தும் இவ்வங்கியில்  தன்னை இணைத்து கொண்டது.சீனா ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கிற்கு முதல் கட்டமாக 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்துள்ளது .ஏற்கனவே சீனா வளர்ச்சி வாங்கி 900 பில்லியன் டாலர் இவ்வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கி வைத்துள்ளது . 2016-ல் மட்டும் சீன வங்கிகள் வெவ்வேறு நாடுகளுக்கு இத்திட்டத்திற்காக 90 பில்லியன் டாலரை கடனாக அளித்துள்ளது .

பழைய வரலாற்று சிறப்புமிக்க பட்டு பாதையானது வணிகத்திற்கு மட்டுமல்லாமல் கலாசார பரிமாற்றத்திற்கு வழி செய்தது .அதன் தாக்கத்தை நாம் சீனாவிலும் மற்ற நாடுகளிலும் இன்றும் பார்க்கலாம் .இன்று இந்த புதிய பட்டு  பாதை தேவையா என்றால் சீனாவிற்கு இது மிகவும் தேவையே . சீனாவின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்துள்ளது ,அது அவ்வாறே நீடிக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்  , இந்த சூழ்நிலையில் சீனா தனது வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள இத்திட்டம் மிகவும் அவசியம் .சீனாவின் இதுவரை உள்நோக்கி இருந்த பொருளாதாரம் இனி வெளி நோக்கி சொல்லும்.இத்திட்டத்திற்கான மற்ற முக்கிய காரணங்கள் :

  • மலாக்கா ஜலசந்திற்கு(Malacca Strait) மாற்று 
  • சீனா ரென்மினிபி பரிவர்த்தனை -அமெரிக்க டாலருக்கு மாற்றாக 
  • ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கை குறைப்பது 
  • மற்றும் ஐந்து இலக்கை அடைவது  (கொள்கை ஒருங்கிணைப்பு ,வசதிகள் இணைப்பு ,தடையற்ற வர்த்தகம் ,நிதி ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் கூட்டணைப்பு )

சீனாவின் இந்த கனவு நிறைவேறுமா?  இத்திட்டத்தின் பல பணிகள் ஆரம்பித்துவிட்டன.லாவோஸ் 418 கிலோ மீட்டர் ரயில் பாதை, மேற்கூறியது போல பாகிஸ்தானில் பல கட்டுமான பணிகள் மற்றும் சீன-ஐரோப்பிய ரயில் பாதை .சீனா இதிலிருந்து பின்வாங்க போவதில்லை . பல நாடுகளில் இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தி  கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால்  சீனா  தங்கள் வேலைகளையும் இயற்கை வளங்களையும் எடுத்துக்கொள்ளுமென்று அஞ்சி . ஆனால் சீனாவின் இரும்பு கரம் நீளும் , இப்பொழுது இல்லாவிட்டாலும் வரும் காலத்தில் இந்த கனவு நிறைவு பெரும்.

1 comment:

artist said...

very informative. u should blog more often. :)