Monday, October 17, 2011

Nice Poems

சமீபத்தில் வாசித்த கவிதைகளில் பிடித்தது 

வாகை என்ற இனம் 

கோடைமழைக்குப் பிந்திய
இந்த அதிகாலையில்
வாகை மரத்தினடியில் நிற்கிறேன்

இந்த வாகை மரம்தான் எத்தனை பெரியது
எத்தனை எத்தனை பூக்கள்
இளமஞ்சளாய் மலர்ந்திருக்கின்றன
என்றபோதும்
வாகை மரம் புறக்கணிக்கப்பட்ட மரங்களில் ஒன்று

நானும் வாகையும் இவ்விதத்தில் ஒன்றுதான்
ஓர் இனத்தின் முன்னே பெண்ணாக
விருட்சங்களின் நடுவே வாகையாக
புறக்கணிப்பின் வேதனையை அறிந்தவர்களாக

வேர்கள் நிலத்திலும்
கிளைகள் ஆகாயத்திலுமாய் வியாபித்திருக்கிறோம்

வெற்றியை அறிந்திடச் செய்பவர்கள்தான் நாங்கள்

வாகையும் நானும் ஒருபோதும்
நிழலுக்காகவோ பூக்களுக்காகவோ
வளர்க்கப்படவில்லை
என்றறியும் ஒருவன்
வாகை மலரைச் சூடிக்கொள்ளும் இரவில்

நிராகரிப்பின் வலி மறந்து பெருமையடைவேன்.


கல்வாரி மலைப்பாதையில்
ஜெருசலத்து நகரின் வீதியில்
கல்வாரி மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தேன்

நெருக்கமான கடைகளும்
கூட்டமாக மனிதர்களும்
சற்றே களைப்புற்ற
பயணத்தின் இடைவெளியில்
இயேசுவைச் சந்தித்தேன்

அவர் முக்காடிட்டிருந்தார்
தேவரீர்
ஏன் முக்காடிட்டிருக்கிறீர்
எனக் கேட்டேன்
ஒருவரும் என்னைத் தரிசிக்க விரும்பவில்லை
மேலும்
நான் வியாபாரப் பொருளாகிவிட்டேன்
வியாபாரிகள்
யாரொருவரையும் பார்க்க விரும்பவில்லை

கைப்பையிலிருந்த
முகம் பார்க்கும் கண்ணாடியை
அவரிடம் தந்தேன்
அவர்
தன் முகத்தையும்கூடக் காண்பதற்கு
விரும்பவில்லை என்றார்

தன் முகமும்
தன் இருப்பும்
மனிதத் திரையில் மறைந்திருப்பதாகவும்
கூறிக் கடந்தார்
அவர் நடந்து செல்லும் பாதையைப்
பார்த்துக்கொண்டிருந்தேன் இருளில்.


   -சக்தி ஜோதி 

ஒரு ராகத்தின் மேல்


எனக்கு சங்கீதம் தெரியாது.
பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்.
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது.
வயலினின் நிறமோ அற்புதம்.
இசை புழங்கிய வழவழப்பு
எல்லா இடத்திலும்.
தப்பித்தவறி வந்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது
வயலின் நரம்புகளில்
மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய் குவித்து ஊதத் தயக்கம்.
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக் கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்
மேல் தானே.
      -வண்ணதாசன் 

1 comment:

Anonymous said...

A.Muthukrishnan's website is missing in this list, Its one of the best site's today in tamil, with regular update's.

http://amuthukrishnan.com/