Sunday, October 20, 2019

ரன்னிங் டைரி -15

19-10-2019 18:15
கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட தொடங்கியவுடன் எதிரே பச்சை வெள்ளை டி சேர்ட் அணிந்த சிறுவன் ஒருவன் அவனது பெற்றோர்களுடன் வந்து கொண்டிருந்ததை  கவனித்தேன் .டி சேர்ட்டில் அயர்லாந்து என்று எழுதியிருந்தது. அப்போதுதான் இன்றைய உலக கோப்பை ரக்பி காலிறுதி போட்டி  ஞாபத்தில் வந்தது. நியூசிலாந்து அயர்லாந்து மோதுகிறது. அப்படியே எனது எண்ணங்கள் நியூசிலாந்து அணியின் பக்கம் சென்றது. எப்போது அந்த அணியின் விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தேன் என்ற ஞாபகம் இல்லை. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் விளையாடிய அனைத்து போட்டிகளையும் பார்த்திருக்கின்றேன். ஒரு விளையாட்டுக் குழு விளையாட்டிலும் சரி தங்களின் நடத்தையிலும் சரி இவ்வளவு ரசிக்கும் படி இருந்ததாக எனக்கு தெரியவில்லை . ஸ்டீவ் வாக்கின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அனைத்தையும் வென்றார்கள் ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர்களைப் பிடிக்காது. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்தையும் வென்றார்கள் ஆனால் அப்போது நான் பிறக்கவே இல்லை.ஆல் பிளக்ஸ் (ALL BLACKS ) என்று அழைக்கப்படும் நியூசிலாந்து ரக்பி அணி  ஒரு விளையாட்டு குழு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

எனக்கு  இன்று  அவர்கள் தோல்வி அடைவார்கள் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. கடவுளிடம் வேண்டிக்கொண்டேன் அவர்கள் வெற்றி அடைய வேண்டுமென்று. சட்டென்று எனது கவனம் திசைமாறி எதிரே ஓடிக்கொண்டிருந்த இருவர் மீது சென்றது. இருவரும்  "200 Runners ,2000 Kilometers , 200 Years " என்று அச்சிட்ட டி சேர்ட் அணிந்திருந்தார்கள். சற்றே வயதானவர்கள் போன்ற தோற்றம்.  ஆனால் அவர்களின் ஓட்டம் அவர்கள் அனுபவசாலிகள் என்று காட்டியது. அவர்களைத் தொடர்ந்து ஒரு கிலோமீட்டருக்கும் மேல் சென்றேன்.அவர்களைத் கடந்து சென்ற போது எதிரே ஒரு தமிழ் குடும்பம் வந்தது. "சீமான் சொன்னது தப்புதான்" என்று ஒருவர் சொன்னார். மற்றொருவர் "வர வர அரசியலே பேசாதபடி பண்ணிருவாய்ங்க போல " என்றார்.இருவரும் பயங்கர சத்தமாக பேசிக்கொண்டு சென்றனர். பொது இடத்தில் சத்தமாக  பேசுவதில் தமிழருக்கு இணை வேறு யாரும் கிடையாது.

இரண்டு சைக்கிள்கள்   சிவப்பு லைட் போட்டுக்கொண்டு என்னை கடந்து சென்றது பின்னால் ஒருவர் மிக விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தார். எதோ ஓட்டப் பந்தயம்போல. தொடர்ந்து வீரர்கள் ஓடிக்கொண்டே வந்தனர்.அவர்களை பார்ப்பது அழகு.நான் பந்தயம் முடியும் இடத்தை அடைந்தபோது தான் தெரிந்தது அது ஒரு biathlon - நீண்ட தூர ஓட்டமும் நீச்சலும். பல வருடங்களாக என்னுடை குறிக்கோள் ironman போட்டியில் பங்கேற்பதுதான் ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல என்பது எனக்கு மிக விரைவில் தெரிந்ததும் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன் . அதற்கு முக்கிய காரணம் எனக்கு நீச்சல் அப்போது தெரியாது. கடந்த வருடம்தான் ஒழுங்காக நீச்சல் அடிக்க கற்றுக்கொண்டேன் .அதையே யோசித்துக்கொண்டு அந்த வீரர்களை பின் தொடர்ந்து ஓட்டத்தை முடித்தேன்.

No comments: