Friday, July 22, 2011

My Favorite Poems-1

From last year onward i started reading lots of Tamil poems.I thought it will be useful to list these some my favorite poems in here.


பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
                       ---ஞானக்கூத்தன்
 

   

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
                   ---ஞானக்கூத்தன்



காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
            --பிரமிள்
      

பிறந்த ஊர்

வருசம்
போனது தெரியாமல்
போய்விட்டது.

பட்டணத்துக்கு வந்து
நாற்பத்தைந்து ஆண்டுகள்
ஆகிவிட்டன.

பிறந்த ஊருக்கு
புறப்பட்டேன்.
ஒரு வனாந்தரத்தில்
என்னை இறக்கிவிட்டது
பஸ்.

ஐந்து கிலோமீட்டர் நடை
வெயில்
முள்
பனைமரங்கள்
ஒத்தையடிப்பாதை.

மணல் சுடுகிறது
உடம்பு வியர்க்கிறது
தாகம்.

ஒரு முள்மரத்து நிழலில்
இளைப்பாறுகிறேன்,
எனக்கு முன்னே
என்னுடைய கிராமம்.

என்னைப் பார்த்து
நாய்கள் குரைக்கின்றன
பன்றிகள் ஓடுகின்றன
கோழிகளும்
சேவல்களும்
பயத்தில் கெக்கரிக்கின்றன.

சிறுவர்கள்
வேம்படியில்
வேப்பங்கொட்டை
சேகரிக்கிறார்கள்.

தெருவெங்கும்
அடுப்புச் சாம்பல்.
உடைந்து நொறுங்கிய
மண்பானை ஓடுகள்.

ஒரு பாட்டி
ஒரு ஓலையை மடித்து
அதில்
தீக்கங்குகள் எடுத்து வருகிறாள்.

ஒரு அண்ணாச்சி
முறுக்குத் தடியில்
அருவாள்
தீட்டிக்கொண்டிருக்கிறார்.

ஒரு பெண்
தன் குழந்தையை
மடியில்
கிடத்தி
சீழ் துடைத்துக்கொண்டிருக்கிறாள்.

தெருவில்
கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு
குழந்தை தலைக்கு
தண்ணீர் ஊற்றுகிறாள்
ஒரு தாய்.
குழந்தை உடம்பு முழுவதும் புண்
தண்ணீரில்
மஞ்சள் வேப்பிலை.

கருவாடு சுடுகிற வாசனை
காற்றில் மிதக்கிறது.

ஒரு திண்ணையில்
இரண்டு குழந்தைகள்
கஞ்சி குடிக்கிறார்கள்.

தெருக்கோடி
எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து
நிற்கிறேன்.

வீடு இருந்த இடத்தில்
ஒரு குப்பைமேடு
ஒரு பெரிய கருவை மரம்
இரண்டு கழுதைகள்
படுத்துக் கிடக்கின்றன.

தெருவில்
புழுதி
வெயில்.
       -- மு.சுயம்புலிங்கம்

No comments: